ரசிகர்கள் உற்சாகம்
ஐபிஎல்லின் 13வது சீசன் கடந்த 19ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகளின் வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தினந்தோறும் சிறப்பான தரமான தருணங்களை ரசிகர்களுக்கு அளித்து வருகின்றனர். நேரிடையாக சென்று பார்க்க முடியாவிட்டாலும் டிவி மூலம் பார்த்து தங்களது உற்சாகத்தை ரசிகர்கள் தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர்.
விரைவில் இந்திய அணி அறிவிப்பு
இந்நிலையில் ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு இந்திய அணியினர் நேரிடையாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அங்கு 4 டெஸ்ட், 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளனர். இதற்கென இந்திய அணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மித், வார்னர் இடம்பெறவில்லை
கடந்த ஆஸ்திரேலிய தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இது ஒரு இமாலய சாதனையாக பார்க்கப்பட்டது. அவர்கள் மண்ணில் அவர்களை வெற்றி கொள்வது அரிதாக நடக்கும் நிகழ்வு என்பதால் இவ்வாறு கருதப்படுகிறது. ஆனால் அந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இடம்பெற்றிருக்கவில்லை.
ஸ்மித், வார்னரால் பாதிப்பில்லை
இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறுவார்கள் என்பதால் தற்போது இந்த தொடர் இந்திய அணிக்கு மேலும் கடுமையானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், வார்னர், ஸ்மித் ஆகியோர் அணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதனால் தனக்கு எந்த வித்தியாசமும் இருக்க போவதில்லை என்று இந்திய பௌலர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
எளிதான ஆஸ்திரேலிய தொடர்
டெஸ்ட் வடிவம் மிகவும் சிறப்பானது என்றும் அதில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 5 மாதங்கள் லாக்டவுனில் இருந்த நிலையில், தற்போது ஐபிஎல் தொடர் தங்களை கிரிக்கெட்டிற்கு வெகுவாக தயார் படுத்தி உள்ளதாகவும், அதனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை எதிர்கொள்வது எளிதாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஆஸி. சுற்றுப்பயணத்திற்கு காத்திருப்பு
கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விளையாடிய அணி வீரர்கள் தற்போதும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தற்போதைய சுற்றுப்பயணத்தை எதிர்கொள்ள காத்திருப்பதாகவும், அந்த தன்னம்பிக்கையுடன் தொடரை தொடர்வது சிறப்பானது என்றும் அவர் தெரிவித்தார்.