பிடித்த ஸ்பின்னர்கள்
வார்னே தற்போதைய காலத்தில் தனக்கு பிடித்த மூன்று ஸ்பின்னர்கள் என இந்தியாவின் குல்தீப் யாதவ், பாகிஸ்தானின் யாசிர் ஷா மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகிய மூவரை குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பந்துவீச்சை தான் ரசித்துப் பார்ப்பேன் என கூறியுள்ளார்.
ஏன் பிடிக்கும்?
இவர்கள் மூவரும் தாக்குதல் பாணி பந்துவீச்சை பின்பற்றுகிறார்கள். ரன் அடித்தாலும் பரவாயில்லை என்ற மனப்பான்மையில், தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுப்பதில்லை. அதே சமயம் விக்கெட்டும் எடுத்து விடுவார்கள். இவர்கள் மூவரும் உலகக்கோப்பையில் ஒருவருக்கு ஒருவர் எதிரணியில் இருந்து கொண்டு எப்படி ஆடுவார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன் எனக் கூறினார் வார்னே.
ரிஸ்ட் ஸ்பின்னர்
வார்னேவுக்கு பிடித்த மூன்று வீரர்களுமே ரிஸ்ட் ஸ்பின்னர்கள். வார்னேவும் ரிஸ்ட் ஸ்பின்னர்தான். அப்படி ரிஸ்ட் ஸ்பின்னில் என்னதான் இருக்கிறது? இதற்கு வார்னே கூறும் பதில், "ரிஸ்ட் ஸ்பின்னில் எப்போதும் விக்கெட்கள் கிடைக்கும். சில சமயம் அதில் அதிக ரன்கள் கொடுக்கப்படலாம். ஆனால், விக்கெட் கிடைத்து விடும். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என்பது மத்திய ஓவர்களில் விக்கெட் எடுப்பது. அந்த ஓவர்களில் ஸ்பின் தான் வீசப்படும். எனவே, ரிஸ்ட் ஸ்பின் முக்கியம்".
ஃபிங்கர் ஸ்பின்னர் நிலை
அப்படி என்றால், ஃபிங்கர் ஸ்பின்னர்கள் தேவை இல்லையா? அதை மறுக்கிறார் வார்னே. நன்றாக ஸ்பின் செய்பவர்கள் எல்லோருமே ஸ்பின்னர்கள்தான். தனது காலத்தில் சக்லைன் முஷ்டாக், முத்தையா முரளிதரன், டேனியல் வெட்டோரி போன்ற ஃபிங்கர் ஸ்பின்னர்கள் இருந்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
குல்தீப் யாதவ் குரு
வார்னே தனக்கு பிடித்த ஸ்பின்னர்கள் வரிசையில் குல்தீப் யாதவ்வுக்கும் இடம் அளித்துள்ளார். குல்தீப் யாதவ்வுக்கு வார்னேதான் ரோல் மாடல். அவரை தான் தன் பந்துவீச்சில் பின்பற்றுகிறார் குல்தீப். பலமுறை வார்னேவிடம் யோசனைகளை பெற்றிருக்கிறார் குல்தீப் யாதவ்.