உலக கோப்பை போட்டி வீரர்
முன்னாள் ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், 59 டெஸ்ட் போட்டிகள், 190 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார். கடந்த 2007 மற்றும் 2015ல் ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற நிலையில், அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடியவர் ஷேன் வாட்சன்.
2015ல் ஓய்வு அறிவிப்பு
டெஸ்ட் போட்டிகளில், 3731 ரன்களை குவித்துள்ள இவர், 75 விக்கெட்டுகளையும் விழ்த்தியுள்ளார். இதேபோல ஒருநாள் போட்டிகளில் 5757 ரன்களை அடித்துள்ள வாட்சன், 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் முன்னணி ஆல்-ரவுண்டராக வலம் வந்த வாட்சன் கடந்த 2015ல் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
2018ல் கோப்பையை வெல்ல காரணம்
கடந்த சில சீசன்களில் சிஎஸ்கேவிற்காக விளையாடியுள்ள ஷேன் வாட்சன், கடந்த 2018ல் அந்த அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப்போட்டியில் இவர் அடித்த சதம் அணியின் கோப்பை கனவை உறுதிப் படுத்தியது. இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த 2008ல் இடம்பெற்ற வாட்சன், அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
3874 ரன்கள் குவிப்பு
ஐபிஎல்லில் இதுவரை விளையாடியுள்ள வாட்சன், 3874 ரன்களை குவித்துள்ளார். மேலும் தான் விளையாடியுள்ள 145 ஐபிஎல் போட்டிகளில் 92 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 299 ரன்களை அவர் குவித்துள்ளார். இதன் சராசரி 29.90.
ஓய்வு அறிவிப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிஎஸ்கே -கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அப்போது அனைத்து வடிவங்களிலும் தன்னுடைய ஓய்வை அறிவித்தார் வாட்சன். தற்போது தன்னுடைய நாட்டிற்கு திரும்பியுள்ள அவர் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
புதியது துவங்கவுள்ளது
தற்போது ஒரு சாப்டர் முடிவடைந்துள்ளதாகவும், அடுத்த சாப்டர் திறக்க உள்ளதாகவும் வாட்சன் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். தான் குழந்தையாக இருந்தபோது டெஸ்ட் போட்டியை பார்த்துக்கொண்டு தான் ஆஸ்திரேலியாவிற்காக விளையாட உள்ளதாக தன்னுடைய தாயிடம் தெரிவித்ததை அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
கனவு நனவாகியது
அந்த கனவு நனவாகியதாகவும், தற்போது தன்னுடைய ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு தான் வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தான் தன்னுடைய கனவை நனவாக்கி வாழ்ந்துள்ளதற்கு தான் மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.