தென்னாப்பிரிக்க தொடர் ரத்து
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடக்க வேண்டிய ஐபிஎல் தொடரும் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.
லாக்டவுன்
இந்திய வீரர்கள் கொரோனா வைரஸ் பரவி வந்ததால் லாக்டவுனில் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தனர். கடந்த இரு மாதமாக யாரும் பயிற்சி செய்ய வெளியே வரவில்லை. கடுமையான லாக்டவுன் விதிகளும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.
விளையாட்டுப் பயிற்சிக்கு அனுமதி
மூன்று லாக்டவுன்கள் முடிந்து நான்காவது லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்றாக தனிப்பட்ட விளையாட்டுப் பயிற்சிகளை துவக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், கிரிக்கெட் வீரர்கள் தனித் தனியாக பயிற்சி செய்ய வாய்ப்பு ஏற்பட்டது.
ஷர்துல் தாக்குர்
அதில் முதல் வீரராக வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார். அவர் மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பை சேர்ந்தவர். மும்பை நகரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த ஷர்துல் தாக்குர் பயிற்சி செய்ய துவங்கி உள்ளார்.
மும்பையில் சிக்கல்
பால்கர் மாவட்டம் சிவப்பு மண்டலம் அல்ல என்பதால் அங்கே விளையாட்டுப் பயிற்சிகள் செய்ய அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மும்பை நகரில் இருப்பதால் இப்போதைக்கு பயிற்சி செய்ய முடியாது என கூறப்படுகிறது.