ஜாக்பாட் வாய்ப்பு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் ஸ்குவாடில் சேர்க்கப்பட்ட போது கூட, பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மையில் முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, ஹர்திக் பாண்ட்யாவால் முன்பு போல் தொடர்ச்சியாக பந்து வீச முடியாததால், அவரை இங்கிலாந்து தொடரில் பிசிசிஐ சேர்க்கவில்லை. அவருக்கு பதில், ஒரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் வேண்டும் என்பதால் தான் ஷர்துல் தாகூருக்கு இங்கிலாந்து செல்லும் ஜாக்பாட் வாய்ப்பு அடித்தது. ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கனக்கச்சிதமாக பயன்படுத்தி, மிகச் சிறப்பாக விளையாடி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தினார் ஷர்துல் தாகூர்.
டெஸ்ட் வாய்ப்பு உறுதி
குறிப்பாக, நான்காவது டெஸ்ட் போட்டியில், இரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து, இங்கிலாந்து அணியின் டஃப் பிட்சில், இங்கிலாந்து பேஸர்களை திணறவைத்தார். அதேபோல், பவுலிங்கிலும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் விக்கெட்டை முக்கிய நேரத்தில் கைப்பற்றி, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்தளவுக்கு சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார் ஷர்துல் தாகூர். இனி, நிச்சயம் டெஸ்ட் தொடரில் அவருக்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்குமோ இல்லையோ, நிச்சயம் SENA நாடுகளில் அவருக்கான டெஸ்ட் வாய்ப்பு உறுதி.
4 ஓவரில் 56 ரன்கள்
இந்நிலையில், ஷர்துல் தாகூர், தனது அபார ஃபார்மை அப்படியே ஐபிஎல்-லிலும் வெளிப்படுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிக மிக சிக்கனமாக ஒவ்வொரு போட்டியிலும் பந்து வீசி வருகிறார். குறிப்பாக, இன்று அபுதாபியில் நடந்து வரும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், சென்னை அணியின் தி பெஸ்ட் பவுலராக பந்து வீசி இருக்கிறார். சாம் கர்ரன் வீசிய 4 ஓவர்களில் 56 ரன்களை விட்டு விளாசிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள், ஹேசில்வுட் ஓவரையும் விட்டுவைக்கவில்லை. அவரது 4 ஓவரில் 40 ரன்கள் திரட்டப்பட்டது. எனினும் அவருக்கு 2 விக்கெட்டுகள் கிடைத்தது தான் ஒரே ஆறுதல்.
மெய்டன் ஓவர் விக்கெட்
அதேசமயம், ஷர்துல் தாகூர் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார். தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே, கொல்கத்தா அணியின் அதிரடி ஓப்பனர் வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்த நான்கு ஓவரில், ஒரு மெய்டன் விக்கெட் ஓவரும் வீசியுள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்திய அணியின் ஒரு தவிர்க்க முடியாத வீரராக ஷர்துல் தாகூர் மெல்ல மெல்ல உருவாகி வருகிறார் என்பதை நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இவர் இதே ஃபார்மை தொடர்ந்து வெளிப்படுத்தினால், இன்னும் 2 வருடங்களில் இந்திய அணியின் அசைக்க முடியா வீரராக உருவெடுத்திருப்பார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.