ஐசிசி பொறுப்பிலிருந்து விலகல்
நாக்பூரை சேர்ந்த வழக்கறிஞராக செயல்பட்ட சஷாங்க் மனோகர், கடந்த 2015ல் பிசிசிஐ தலைவராக பொறுப்பில் இருந்தார். அந்த நிலையில், ஐசிசி தலைவராக கிடைத்த வாய்ப்பை ஏற்று அதன் தலைவராக பொறுப்பேற்றார். பிசிசிஐ தலைவராக இருந்த அவர் இடைப்பட்ட காலத்தில் எடுத்த இந்த முடிவு மிகவும் சுயநலமானது என்று சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி தலைவராக பொறுப்பு
பிசிசிஐ தலைவராக இருந்து அதன் பலன்களை அனுபவித்த மனோகர், அதன்பின்பு அந்த பதவியை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்று தெரிந்தே அதை துறந்து ஐசிசி தலைவராக பொறுப்பேற்றதாக ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது ஐசிசி தலைவராக இந்தியாவிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது என்பதால் அந்த பதவியை துறந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்திய வாய்ப்புகளுக்கு தடை
தன்னுடைய பதவிக்காலத்தில் இந்திய கிரிக்கெட்டிற்கு போதுமான சேதத்தை சஷாங்க் மனோகர் ஏற்படுத்தியுள்ளதாகவும் ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். அவருடைய பதவிக்காலம் முடிந்துள்ளதால் இந்திய கிரிக்கெட்டை சேர்ந்த அனைவரும் மகிழ்ச்சி அடையலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் இந்தியாவின் நிதி வாய்ப்புகள் மற்றும் ஐசிசியில் இந்தியாவின் வாய்ப்புகளை கிடைக்கவிடாமல் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் எதிரியாக செயல்பட்டவர்
மேலும் ஐசிசி தலைவராக தன்னுடைய பதவிக்காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் முக்கியத்துவத்தை குலைத்து இந்தியாவிற்கு எதிரியாக செயல்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பல திட்டங்களில் பிசிசிஐக்கு எதிரான முடிவுகளை அவர் எடுத்துள்ளதாகவும்கூறியுள்ளார்.
ஐசிசி மூலம் பிசிசிஐக்கு குடைச்சல்
கடந்த 2015ல் முக்கியமான நேரத்தில் பிசிசிஐ தலைவர் பதவியை துறந்த சஷாங்க், தற்போது கொரோனா பாதிப்பு நேரத்தில் பாதியிலேயே தனது ஐசிசி பதவியை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பிசிசிஐயை பயன்படுத்தி ஐசிசி தலைவர் பதவியை பிடித்த அவர், அந்த பொறுப்பை பயன்படுத்தி பிசிசிஐக்கு எதிராக செயல்பட்டதாகவும் ஸ்ரீனிவாசன் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.