மும்பை: பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சஷாங்க் மனோகர் இன்று ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில்தான் இப்பதவிக்கு அவர் வந்திருந்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா மரணமடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் பிசிசிஐ பொதுக்குழு கூடி, சஷாங்க் மனோகரை தலைவராக நியமித்தது.
இந்த நிலையில், சஷாங்க் மனோகர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியிலும், தலைவர் பதவி வகித்து வருகிறார். அந்த விதிமுறைப்படி, பிசிசிஐ தலைவராக தொடர முடியாத சூழ்நிலை இருப்பதால் சஷாங்க் மனோகர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ராஜினாமாவுக்கான காரணம் முழுமையாக தெளிவுபடுத்தப்படாமல் உள்ளது.