மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார் சஷாங்க் மனோகர். சரத் பவாரின் நிழலாக கருதப்படும் மனோகர் 2 ஆண்டு காலம் இப்பதவியில் நீடிப்பார். ஏற்கனவே இவர் 2008 முதல் 2011 வரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் மனோகர் ஒரு மநதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்ட்ட பின்னர் மனோகர் பேசினார்.
மனோகர் பேசுகையில், பிசிசிஐ என்பது மிகப் பெரிய பிராண்ட் ஆகும். ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகவில்லை. இவ்வளவு பெரிய அளவில் அது வளர்ந்திருக்க முடியாது. ஜக்மோகன் டால்மியா மேற்கொண்ட பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்.
conflict of interest தொடர்பாக ஏற்பட்டுள்ள புகார்களைக் கவனிக்க எத்திக்ஸ் அதிகாரி ஒருவரை பிசிசிஐ நியமிக்கும்.
கிரிக்கெட்டில் ஊழலுக்கு எந்த வழியிலும் இடம் கிடையாது. இதுதொடர்பாக வீரர்களுக்கும் போதிக்கப்படும்.
அனைத்து மாநில கிரிக்கெட் சங்க கணக்குகளை கையாள தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.
ரூ. 25 லட்சத்திற்கு மேல் செலவிடப்படும் விஷயம் குறித்து வாரியத்தின் இணையதளத்தில் தகவல் தெரிவிக்கப்படும்.
இந்தியாவில் போதிய அளவில் தரமான ஸ்பின்னர்கள் இல்லை. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக மும்பையில் இன்று கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மனோகர் ஒருமனதாக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக 2008ம் ஆண்டு பவாருக்குப் பின்னர் தலைவர் பதவிக்கு வந்தார் மனோகர். 2011 வரை தலைவராக நீடித்தார். அதன் பின்னர் சீனிவாசன் தலைவரானார் என்பது நினைவிருக்கலாம்.
முன்னதாக மனோகரை மீண்டும் தலைவர் பதவிக்கு வர விடாமல் தடுத்து தனது ஆளை உள்ளே நுழைக்க சீனிவாசன் கடுமையாக முயன்றார். ஆனால் அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போய் விட்டது. இதனால் ஒதுங்கிக் கொண்டார்.