இந்தியா சிறப்பான வெற்றி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. கோலி, ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத அணி இந்த வரலாற்று சாதனையை புரிந்துள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வரலாற்று வெற்றிக்கு காரணம்
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கும் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கோச் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் இந்த வெற்றிக்கு பின்னணியில் உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வீழ்த்துவது கடினம்
ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானது என்று குறிப்பிட்ட அவர், இளம் வீரர்களை கொண்ட அணி இத்தகைய சாதனையை புரிந்ததை தான் தன்னுடைய வாழ்நாளில் பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். ரிஷப், சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்கள் கடந்த ஆண்டுகளில் அன்டர் 19 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்று தங்களது அடித்தளத்தை சிறப்பாக அமைத்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
மனவலிமை அதிகரிப்பு
மனதளவிலும் உடலளவிலும் வலிமையான முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், இளம் பௌலர்களின் மன வலிமையை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே, முதல் போட்டியில் மோசமான தோல்வியை கண்ட இந்திய அணி, தொடர்ந்து வீழ்ந்துவிடாமல் அவர்களை சிறப்பாக ரவி சாஸ்திரி வழிநடத்தியுள்ளதாகவும் கோலியின் ஆக்ரோஷமான செயல்பாடும் அணிக்கு சிறப்பாக உதவி புரிந்துள்ளதாகவும் இன்சமாம் கூறியுள்ளார்.