நிரந்தர வீரர் தவான்
தவான் 2013 முதல் சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார். அந்த அணியின் நிரந்தர வீரர் என்ற அளவில் முன்பு இருந்த தவான், சென்ற 2018 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியால் தக்க வைக்கப்படவில்லை. அவரை ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி முதலில் எடுக்கவில்லை. பின்னர், வேறு அணி அவரை 5.2 கோடி விலைக்கு வாங்கிய பின், "ரைட் டு மேட்ச்" என்ற முறையில் அவரை சன்ரைசர்ஸ் அணி வாங்கிக் கொண்டது.
ஏல விலை குறைவு
தன்னை தக்க வைக்காமல், ஏலத்தில் விட்டதோடு குறைந்த விலைக்கு வேறு அணி வாங்கிய பின் மீண்டும் தன்னை வாங்கியதால் தவான், சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்தின் மீதும், பயிற்சியாளர் மீதும் கடுப்பில் இருந்துள்ளார். ஏலம் முடிந்த பின் தவான் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சில செய்திகள் கசிந்தன. அடுத்து, கேப்டன் பதவிக்கு தன்னை முன்னிறுத்தாமல், கேன் வில்லியம்சனை நியமித்ததும், தவானுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த காரணங்களால் சன்ரைசர்ஸ் அணி, தவானை அவர் முதல் ஐபிஎல் தொடரில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கே கொடுத்து விட்டது.
சன்ரைசர்ஸ் அணி விளக்கம்
சன்ரைசர்ஸ் அணி அளித்துள்ள விளக்கத்தில், "தவான் நாங்கள் அவரை வாங்கிய ஏல விலை பிடிக்காமல், நிலை கொள்ளாமல் இருந்தார். ஐபிஎல் விதிப் படி எங்களால், அதை நிவர்த்தி செய்ய முடியவில்லை" என வெளிப்படையாக கூறியுள்ளது. ஷிகர் தவானை டெல்லி அணிக்கு அளித்துவிட்டு, விஜய் சங்கர், ஷாபாஸ் நதீம் மற்றும் அபிஷேக் சர்மாவை வாங்கியுள்ளது.
குஷியில் டெல்லி
டெல்லி டேர்டெவில்ஸ் அணி, தவானை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியோடு உள்ளது. டெல்லி அணி சென்ற ஐபிஎல் தொடரில் படுமோசமாக செயல்பட்டது. தவானின் வரவு அணியை நிலை நிறுத்தும் என எதிர்பார்க்கிறது டெல்லி.