சிறப்பான ஆட்டத்தை தரத்தவறிய ஷிகர் தவான்
கடந்த 2013 முதல் இந்திய அணிக்காக ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை தந்துவந்த ஷிகர் தவான் சமீப காலங்களில் அதிலிருந்து தவறியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இடத்தை தவறவிட்டவர்
டெல்லியை சேர்ந்த ஷிகர் தவான், சமீப கால ஆட்டங்களின்மூலம் டெஸ்ட் போட்டிகளிலும் தனது இடத்தை தவறவிட்டுள்ளார். வங்க தேசத்திற்கு எதிராக இந்திய அணி விளையாடிய மூன்று சர்வதேச டி20 போட்டிகளிலும் 41, 31, மற்றும் 19 ரன்களிலேயே ஆட்டமிழந்து ரசிகர்களின் அதிருப்தியை பெற்றுள்ளார்.
டெல்லி அணி சார்பில் போட்டி
இந்நிலையில் சையத் முஸ்தாக் அலி கோப்பைக்காக தனது மாநிலமான டெல்லி சார்பில் போட்டியிட்டு விளையாடிவந்த ஷிகர் தவான், மகாராஷ்டிராவிற்கு எதிரான போட்டியில் விளையாடும்போது தனது மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகிழ்ச்சியுடன் போஸ்
இந்நிலையில் தான் சிகிச்சை பெற்றுவரும் கால் மூட்டில் போடப்பட்டுள்ள கட்டுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஷிகர் தவான், அங்குள்ள மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
|
டிவிட்டரில் எழுச்சி பகிர்வு
மேலும் நாம் விழுந்தாலும், காயம் பட்டாலும் மீண்டும் எழ வேண்டும் என்று அவர் தனது டிவிட்டரில் பதிவினை வெளியிட்டுள்ளார். எந்த சூழ்நிலையிலிருந்தும் நாம் மீண்டு வெளியில் வரவேண்டும் என்றும் அதன் மூலமே எந்த சூழலிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ள அவர் 4- 5 நாட்களில் மீண்டும் விளையாட வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மீண்டு வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை
துவக்க ஆட்டக்காரராக தன்னுடைய சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவானுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனைக்காலத்தினால் அவர் சரிவர பிரகாசிக்க முடியவில்லை என்றும் தன்னுடைய மன உறுதியினால் இந்திய அணிக்கு அவர் மீண்டும் சிறப்பான விளையாட்டை தருவார் என்றும் அவருடைய ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.