இன்ஸ்டா நேரலையில் விவாதம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதையொட்டி அவர்களை பரபரப்பாக வைத்துக்கொள்ள இன்ஸ்டாகிராம் பல நேரலைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இத்தகைய நேரலையின் ரேபிட்-பயர் சுற்றில் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் மற்றும் முன்னாள் பௌலர் இர்பான் பதான் ஆகியோர் கலந்துரையாடினர்.
பிடித்தமான பேட்டிங் பார்ட்னர்
இந்நிலையில் இர்பான் பதானின் கேள்விகளுக்கு பதிலளித்த ஷிகர் தவான், தனக்கு பிடித்தமான கேப்டன் எம்எஸ் தோனிதான் என்று கூறியுள்ளார். தான் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலியின் தலைமையின்கீழ் மட்டும்தான் விளையாடியுள்ளதாகவும், இப்போதைக்கு எம்எஸ் தோனியே தனது சாய்ஸ் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல, தனக்கு பெஸ்ட் பேட்டிங் பார்ட்னர் என்றால் அது ரோகித் சர்மாதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விராட்கோலி சிறந்த பேட்ஸ்மேன்
இதேபோல தற்போதைய சூழலில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலி தான் என்றும் ஷிகர் தவான் கூறியுள்ளார். இதேபோல, கடந்த ஆண்டு உலக கோப்பையின்போது 5 சதங்களை அடித்து ரோகித் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறித்து தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
'டப்'பான பௌலர் குறித்து தவான்
இதனிடையே ஷிகர் தவான் சந்தித்த பௌலர்களில் 'டப்'பானவர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆஸ்திரேலிய பௌலர் மிச்செல் ஸ்டார்க்கை கைகாட்டியுள்ளார். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதனால் அனைவருக்கும் பாசிட்டிவிடி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.