லண்டன்: காயத்தால் அவதிப்பட்டு வந்த ஷிகர் தவான் எஞ்சியுள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் ஆட்டத்தில் தவான் அருமையான சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருந்தார். அந்த போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்தை எதிர் கொண்ட தவானுக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர், முதலுதவி எடுத்துக்கொண்டு விளையாடிய தவானுக்கு பிறகு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு இடது கை பெரு விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால், அடுத்த 3 போட்டிகளுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனால் தவான் 3 வாரங்கள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கேயே சிகிச்சை பெற்ற தவான், தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வந்தார். இந் நிலையில் பிசிசிஐ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இங்கிலாந்து தோல்விக்கு பின் ஆப்கன் வீரர்கள் ஓட்டலில் தகராறு... உள்ளே புகுந்த போலீஸ்.. என்ன நடக்குது?
எஞ்சியுள்ள போட்டிகளில், தவான் பங்கேற்கமாட்டார் என்று கூறியிருக்கிறது. அவருக்கு மாற்று வீரராக இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பன்ட் மான்செஸ்டரில் ஏற்கனவே இந்திய அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது அதிகாரப்பூர்வ வீரராக அறிவிக்கப் பட்டு இருக்கிறார்.
உலக கோப்பை தொடரில் தான் விளையாடிய அனைத்து போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.