டெல்லி கேபிடல்ஸ் வெற்றி
ஐபிஎல்லின் 34வது போட்டி நேற்றைய தினம் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சிஎஸ்கே 179 ரன்களில் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. 180 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஷிகர் தவான் அதிரடி
இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அந்த அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினாலும் அதிரடி காட்டிய ஷிகர் தவானை தடுத்து நிறுத்த முடியவில்லை.
பொளந்து கட்டிய ஷிகர்
கடந்த சில போட்டிகளாக அதிரடி காட்டிவரும் ஷிகர் தவான், தன்னுடைய ஐபிஎல்லின் முதல் செஞ்சுரியை இந்த போட்டியில் பூர்த்தி செய்துள்ளார். மேலும் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து 68 பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தார். ஐயர் தவிர்த்து மற்றவர்கள் யாரும் பார்ட்னர்ஷிப்பிற்கு கைகொடுக்காத நிலையிலும் அவரது அதிரடி தொடர்ந்தது.
58 பந்துகளில் செஞ்சுரி
17வது ஓவரில் 91 ரன்கள் அடித்திருந்த அவர் அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்தார். தொடர்ந்து தன்னுடைய செஞ்சுரியை எந்தவித பதட்டமும் இல்லாமல் முடித்தார் ஷிகர். இதன்மூலம் தன்னுடைய அணியின் வெற்றியையும் அவர் உறுதி செய்துள்ளார். வெறும் 58 பந்துகளில் அவர் தன்னுடைய செஞ்சுரியை அடித்துள்ளார்.