இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் கொரோனா
கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இப்போது தான் அந்த வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் வரும் நாட்களில் ஏற்படப் போகும் பாதிப்புக்கு இப்போதே தயாராகி வருகின்றன.
வெண்டிலேட்டர் தேவை
இந்தியாவில் 6,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக மருத்துவ வசதிகளில் குறிப்பாக வெண்டிலேட்டர் தேவையை சமாளிக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.
சோயப் அக்தர் கோரிக்கை
கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு தீவிரமடையும் நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் உதவி அவசியம் தேவை. ஒவ்வொரு நாட்டிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே வெண்டிலேட்டர் கையிருப்பில் உள்ளது. இந்த நிலையில் தான் சோயப் அக்தர் இந்தியாவிடம் வெண்டிலேட்டர் தருமாறு கேட்டுள்ளார்.
பாகிஸ்தான் எப்போதும் மறக்காது
மேலும், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்தி கொரோனா வைரஸ் நிவாரண நிதி திரட்டலாம் என்ற யோசனையையும் கூறி உள்ளார். இந்தியா வெண்டிலேட்டர் கொடுத்தால் அதை பாகிஸ்தான் எப்போதும் மறக்காது. பதிலுக்கு எங்களால் கிரிக்கெட் தொடரில் ஆட அழைக்க மட்டுமே முடியும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.
10,000 வெண்டிலேட்டர் கொடுத்தால்..
"இந்தியா எங்களுக்காக 10,000 வெண்டிலேட்டர் உருவாக்க முடிந்தால் அந்த உதவியை பாகிஸ்தான் எப்போதும் மறக்காது. ஆனால், எங்களால் பதிலுக்கு போட்டிகளில் ஆட அழைப்பு மட்டுமே விடுக்க முடியும். மற்றவற்றை அதிகாரத்தில் உள்ளவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்." என்றார் சோயப் அக்தர்.
இருதரப்பு கிரிக்கெட் தொடர்
இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் நீண்ட காலமாக நடைபெறாமல் இருக்கும் நிலையில், சோயப் அக்தர், கொரோனா வைரஸ் பாதிப்பை சமாளிக்கும் வகையில் நிவாரண நிதி திரட்ட இரு நாடுகளும் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம் என கூறி உள்ளார்.
இந்த நேரத்தில் சாத்தியமா?
இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடலாம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். எனினும், கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்.