கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை நவீன உலகம் பார்த்திராத பாதிப்பை இந்த வைரஸ் ஏற்படுத்தி உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 5,30,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, இத்தாலி நிலை
24,000 பேர் வரை உலகம் முழுவதும் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. விரைவில் அந்த நாடுகளில் மட்டுமே தலா 1 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் நிலை
இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் இன்னும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், சில நூறு பேருக்கு பாதிப்பு இருக்கிறது. அதனால், மக்களிடையே பெரும் பரபரப்பு உள்ளது. இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஷோயப் அக்தர் பேச்சு
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தொடர்ந்து தன் யூ-ட்யூப் பக்கத்தில் பேசி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் உலக மக்களின் உணவுப் பழக்கத்தை கடுமையாக சாடி உள்ளார்.
நுரையீரல் முக்கியம்
"கொரோனா வைரஸை நாம் எதிர்க்க வேண்டும் என்றால், நம் நுரையீரல் நல்ல நிலையில் இருக்க வேண்டும். கடந்த 20 வருடங்களில் நாம் நிறைய ஜங்க் உணவு வகைகளை உண்டு நம் நோய் எதிர்ப்பு சக்தியை சீரழித்து வைத்துள்ளோம். அதற்கு நம்மை நாமே குற்றம் சுமத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
நோய் எதிர்ப்பு சக்தி என்னாச்சு?
"நாம் நம் வீட்டில் உணவு உண்டு, தேவையற்ற குளிர்பானங்களை தவிர்த்து இருந்தால், நம் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருந்திருக்கும். அந்த நோய் நம்மை நோக்கி முன்னேறி வரவில்லை. மாறாக நம் நோய் எதிர்ப்பு சக்தி கீழே வீழ்ந்து விட்டது." என்றார் அக்தர்.
வாட்ஸ்ஆப் புகழ் தேவையா?
மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் கூட வாட்ஸ்ஆப்பில் வீடியோ வெளியிட்டு புகழடைய நினைப்பவர்களை சாடி உள்ளார் ஷோயப் அக்தர். சிலர் கொரோனா வைரஸ்-க்கான தீர்வுகள் என பல்வேறு விஷயங்களை கூறி வருவதையும் சாடியுள்ளார்.
தீவிரமான நோய்
"எல்லோரும் கொரோனா வைரஸ் குறித்து ஒரு வீடியோவுடன் வருகிறார்கள். இது போன்ற சூழ்நிலைகளை பயன்படுத்த அவர்கள் ஏன் நினைக்கிறார்கள் என எனக்கு புரியவில்லை. வாட்ஸ்ஆப்பில் கொரோனா வைரஸ் குறித்து மோசமான ஜோக் அடிப்பதை விட நம் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது தான் முக்கியம். இது மிக தீவிரமான நோய்" என்றார் ஷோயப் அக்தர்.
சீன மக்களின் உணவுப் பழக்கம்
முன்னதாக சீன மக்களின் உணவுப் பழக்கம் தான் கொரோனா வைரஸ் உருவாக முக்கிய காரணம் என திட்டி இருந்த அக்தர், அவர்கள் நாய், பூனை, வவ்வால் ரத்தம், வவ்வால் சிறுநீர் ஆகியவற்றை உண்டதாக குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் மக்கள் மீது விமர்சனம்
அதே போல, ஊரடங்கில் இருக்க வேண்டிய பாகிஸ்தான் மக்கள் பைக்கில் சுற்றுலா செல்வதையும் சுட்டிக் காட்டி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதே போல, உணவகங்களை மூட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.