பாகிஸ்தான் சூப்பர் லீக்
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் பாகிஸ்தான் நாட்டின் டி20 தொடர் ஆகும். ஐபிஎல் போலவே நடத்தப்படும் தொடர். கடந்த ஆண்டுகளில் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வர அஞ்சியதால் ஐக்கிய அரபு நாட்டில் அந்த தொடர் நடைபெற்று வந்தது.
வெளிநாட்டு வீரர்கள்
தற்போது முதன்முறையாக பாகிஸ்தான் மண்ணில் அந்த தொடர் முழுவதும் நடைபெறுகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக பாதி தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பலர் வெளியேறினர். அதனால், அந்த தொடருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மாற்றி அமைக்கப்பட்ட தொடர்
மேலும், மார்ச் 22 அன்று முடிவடைய வேண்டிய தொடர் மாற்றி அமைக்கப்பட்டு மார்ச் 18 அன்று இறுதிப் போட்டி நடை பெற உள்ளது. மேலும், மீதமுள்ள போட்டிகள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஷோயப் அக்தர் கோபம்
இந்த நிலையில் தான் ஷோயப் அக்தர் கோபம் அடைந்துள்ளார். பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் திரும்பிய மகிழ்ச்சியில் இருந்த போது கொரோனா வைரஸ் அதை கெடுத்து விட்டதால் அதற்கு காரணமான சீன மக்களை விளாசி இருக்கிறார்.
நீண்ட நாள் கழித்து..
"என் கோபத்திற்கு மிகப் பெரிய காரணம் பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் கிரிக்கெட் பல ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்கு திரும்பி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் முதன்முறையாக பாகிஸ்தானில் நடக்கிறது. ஆனால், அதுவும் தற்போது ஆபத்தில் உள்ளது. வெளிநாட்டு வீரர்கள் வெளியேறி வருகிறார்கள். மேலும், போட்டிகள் மூடப்பட்ட மைதானத்தில் நடக்க உள்ளது" என்றார்.
சீன மக்களை வெளுத்தார்
"நீங்கள் ஏன் வௌவால், அதன் ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை உண்கிறீர்கள், பின் உலகம் முழுவதும் வைரஸை பரப்புகிறீர்கள் என எனக்கு புரியவில்லை. நான் சீன மக்களைப் பற்றித் தான் பேசுகிறேன்" என கொரோனாவுக்கு காரணமான சீனாவை வெளுக்கத் துவங்கினார்.
வௌவால், நாய், பூனை
"அவர்கள் உலகை சிக்கலில் ஆழ்த்தி இருக்கிறார்கள். நீங்கள் எப்படி வௌவால், நாய், பூனை இதையெல்லாம் உண்ணலாம். அது எனக்கு புரியவில்லை. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்" என அவர்களின் உணவுப் பழக்கத்தை குறிப்பிட்டு பொங்கினார் அக்தர்.
பொருளாதாரம் பாதிப்பு
"மொத்த உலகமும் ஆபத்தில் உள்ளது. சுற்றுலா துறை மோசமாக அடிவாங்கி உள்ளது. பொருளாதாரம் மோசமாக மாறி உள்ளது. மொத்த உலகமும் பூட்டு போட்டுக் கொள்ள உள்ளது." என கொரோனாவின் விளைவுகளை பட்டியல் இட்டார் ஷோயப் அக்தர்.
ஒரு சட்டம் வேண்டாமா?
"நான் சீன மக்களுக்கு எதிரானவன் இல்லை. மிருகங்களின் விதிகளுக்கு எதிரானவன். இது உங்கள் கலாசாரமாக இருக்கலாம். ஆனால், இது உங்களுக்கு பலன் அளிக்கவில்லை. மனித குலத்தை கொன்று வருகிறது. நீங்கள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சாப்பிடக் கூடாது" என்றார் அக்தர்.
இந்தியாவை நினைச்சா..
"கடவுளே, அந்த வைரஸ் இந்தியாவுக்கு செல்லாமல் பார்த்துக் கொள். அங்கே 130 கோடி மக்கள் உள்ளனர். நான் இந்தியாவில் இருக்கும் என் நண்பர்களுடன் தொடர்பில் உள்ளேன். அவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறேன்" என்றார் அக்தர்.