இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்கள்
தற்போது தன் பவுன்சர் பந்துவீச்சு குறித்து பேசிய அவர், இந்திய பின்வரிசை பேட்ஸ்மேன்கள் உட்பட பல பேட்ஸ்மேன்கள் தங்களை தாக்க வேண்டாம், அவுட் ஆக்கிக் கொள்ளுங்கள் என கெஞ்சுவார்கள் என கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
வேகமான பந்துவீச்சாளர்
சோயிப் அக்தர் கிரிக்கெட் உலகின் வேகமான பந்துவீச்சாளர் ஆவார். அவரது அசுர வேக பந்துவீச்சில் பவுன்சர் தாக்குதல் நடத்துவார். அவரது பவுன்சரில் சிக்கி அடி வாங்கிய பேட்ஸ்மேன்கள் எண்ணிக்கை அதிகம். அது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசினார்.
தாடையை தாக்கிய பவுன்சர்
இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் வொர்செஸ்டையர் அணிக்காக ஆடும் போது கிளாமோர்கன் அணியை சேர்ந்த மாத்யூ மேனார்ட் தாடையை தன் பவுன்சர் மூலம் தாக்கினார் அக்தர். மேனார்ட் அப்போது வலி தாங்க முடியாமல் மைதானத்தில் கீழே படுத்துவிட்டார்.
தவறான காரியம்
அது குறித்து பேசிய சோயிப் அக்தர், தான் தவறான காரியத்தை செய்வதாக நினைத்ததாகவும், ஆனாலும் தான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என தனக்கு தெரியவில்லை எனவும் கூறினார். அடுத்து பின்வரிசை வீரர்கள் குறித்து பேசினார்.
முரளிதரன்
பல வீரர்கள் தன் பந்துவீச்சை கண்டு அஞ்சுவார்கள் எனக் கூறிய அக்தர், முத்தையா முரளிதரன் தன்னை தாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்வார் என்றார். அதே போல, இந்தியாவிலும் பல பின்வரிசை பேட்ஸ்மேன்கள் தன்னிடம் தாக்கவேண்டாம் என கேட்டுக் கொள்வார்கள் என்றார்.
மனைவி, குழந்தைகள்
இது பற்றி அக்தர் கூறுகையில், "அவர்கள் தங்களை அவுட் ஆக்கிக் கொள்ளுங்கள் ஆனால், தாக்கி விடாதீர்கள் என கேட்பார்கள். தங்களுக்கு மனைவி, குழந்தைகள், பெற்றோர் இருக்கிறார்கள். அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று கூறுவார்கள்" என்றார்.
உண்மையா?
சோயிப் அக்தரின் இந்த பேச்சை இந்திய ரசிகர்கள் எதிர்த்து வருகின்றனர். அக்தர் இஷ்டத்திற்கு பேசி வருகிறாரா? அல்லது உண்மையைத் தான் கூறுகிறாரா? என்ற சந்தேகம் அவரது சமீபத்திய பேட்டிகளை கவனித்து வருபவர்களுக்கு எளிதாகவே எழும்.
கார்கில் போர் பேச்சு
சில நாட்கள் முன்பு கார்கில் போரின் போது தான் போரில் கலந்து கொள்வதற்காக கவுன்டி கிரிக்கெட் ஒப்பந்தங்களை வேண்டாம் என மறுத்து விட்டதாகவும், அந்த அணிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறி இருந்தார். அப்புறம் ஏன் அவர் போரில் கலந்து கொள்ளவில்லை என்பது தான் தெரியவில்லை.