புயல் வேக பந்து வீச்சாளர்
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் சோயிப் அக்தர். அதி வேகப் பந்து வீச்சாளராக வலம் வந்தவர். சச்சின் டெண்டுல்கரே இவரைப் பார்த்து பயந்தார் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால் அதே சச்சின்தான் சோயிப் அக்தரின் பந்துகளை வெளுத்தெடுத்து சோயப்பின் இமேஜைக் காலி செய்தவரும் கூட.
டிராவிட்டுக்குப் பாராட்டு
தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டுக்குள் முடங்கியுள்ள சோயிப் அக்தர் ஒரு ஆன்லைன் சாட்டில் கலந்து கொண்டு பேசும்போது தெரிவித்த கருத்தில் ராகுல் டிராவிடைப் பாராட்டிப் பேசியுள்ளார்.சோயிப் கூறுகையில், தற்போது கிரிக்கெட்டின் புகழ் குறைந்து விட்டது. இதற்கு ஐசிசியும் முக்கியக் காரணம். பத்து வருடமாக நான் வேகப் பந்து வீச்சாளர்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன். அவர்களுக்கான பவுன்சர்களை ஐசிசி தடை செய்து விட்டது என்று கூறியுள்ளார்.
அனல் பறக்க வேண்டும்
சச்சின் -சோயிப் போன்ற போட்டியை இப்போது காண முடியவில்லை. அது மாதிரியான போட்டி இல்லாவிட்டால் கிரிக்கெட்டை யாரும் ரசிக்க மாட்டார்கள். பார்க்க விரும்ப மாட்டார்கள். போட்டி என்றால் அனல் பறக்க வேண்டாமா. இதன் காரணமாகத்தான் இப்போதெல்லாம் கிரிக்கெட் பார்க்கும் ஆர்வமே குறைந்து விட்டது. இதற்கு ஐசிசியைத்தான் நாம் குறை சொல்லியாக வேண்டும்.
இன்சமாம் கஷ்டம்
என்னைப் பொறுத்தவரை ஒருவருக்கு பந்து வீசுவது கடினம் என்று யாரைச் சொல்வதென்றால் நிச்சயம் அது இன்சமாம் உல் ஹக்தான். அவரை அவுட்டாக்குவது ரொம்பக் கஷ்டம். 10 வருடங்களில் நான் அவருக்கு ஒருமுறை கூட பந்து வீசியதில்லை. பந்து கிளம்பிய அடுத்த விநாடியே அதை சரியாக கணித்து விடுவார் இன்சமாம். மற்றவர்களை விட அதில் அவர் அதி வேகமாக இருப்பார். பிறகெப்படி அவரை அவுட்டாக்குவது என்று கேள்வி எழுப்பியுள்ளார் சோயிப்.
டிராவிட் - மார்ட்டின் குரோ
என்னுடைய பந்துகளை சரியாக ஆடியது யார் என்றால் மார்ட்டின் குரோவை சொல்லலாம். எனது பந்துகளை சரியாக கையாண்டுள்ளார். அவர் ஒரு மாயாஜால வீரர். கணிக்கவே முடியாது. இந்திய வீரர்களில் டிராவிடைச் சொல்லலாம். ஜேக்கஸ் கல்லிஸும் கூட சிறந்த வீரர்தான். அவர் ஒரு மிகச் சிறந்த ஆல் ரவுண்டர். அது மட்டுமல்லாமல், ஸ்லிப் பீல்டர்களில் சிறந்தவரும் கூட என்று கூறியுள்ளார் சோயிப் அக்தர்.