ரோகித் சர்மா அபார ஆட்டம்
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3வது சர்வதேச ஒருநாள் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா வழக்கம்போல தனது அதிரடி ஆட்டத்தை பதிவு செய்து சதமடித்தார்.
பார்ட்னர்ஷிப்பில் 137 ரன்கள்
அணியின் துவக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுடன் ஆடிய கே.எல். ராகுல் அணியின் ஸ்கோர் 69ஆக இருந்தபோது ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 137 ரன்களை குவித்தார்.
ஆஸ்திரேலியாவை திணறடித்த இந்தியா
முதல் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை விட்டுக்கொடுத்த இந்தியா, அடுத்தடுத்து ராஜ்காட் மற்றும் பெங்களூருவில் விட்டுக்கொடுக்காமல் ஆஸ்திரேலியாவை திணறடித்து வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற 3வது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு தொடரை கைப்பற்றியது.
முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமன்
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயித்த 287 என்ற இலக்கை ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியாகவும் அதிரடியாகவும் எட்டி போட்டியிலும் அதன்மூலம் தொடரிலும் இந்தியா வெற்றி பெற்றதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் பாராட்டியுள்ளார்.
கமெண்ட் செய்த சோயிப் அக்தர்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்து சக்கையாக்கி, காயப்போட்டு விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் தனது யூ-டியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
"நொந்துபோன ஆஸி. பந்துவீச்சாளர்கள்"
சின்னசாமி மைதானம் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான தளத்தில், எதிரணியினர் குறித்த இரக்கம் சிறிதும் இன்றி அவர்களை ரோகித் சர்மா துவம்சம் செய்து விட்டதாகவும் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் நொந்து போனதாகவும் அவர் நையாண்டி செய்துள்ளார்.