சர்ச்சை நாயகன் சோயிப் அக்தர்
முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், தன்னுடைய கேரியரில் மிகச்சிறந்த பௌலராக விளங்கினார். தற்போது கிரிக்கெட் விமர்சகராக வலம்வரும் சோயிப், தொடர்ந்து தன்னுடைய யூடியூப் சேனலில் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது சிக்கலில் மாட்டி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்தியாவின் பயிற்சியாளராக ஆசை
இந்நிலையில் ஹலோ ஆப் மூலம் அவர் அளித்த பேட்டியில் இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளராக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பௌலிங்கில் தனக்கு உள்ள திறமையை இளம்வீரர்களுக்கு அளித்து சிறப்பான பந்துவீச்சாளர்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அக்தர் திட்டவட்டம்
தனக்கு இந்தியாவின் பௌலிங் கோச்சாக வாய்ப்பளிக்கப்பட்டால், இந்திய அணியில் தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களை மேலும் சிறப்பாக, வலிமையாக மாற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஆரம்ப சீசனில் தான் பங்கேற்று விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கோச்சாக தான் பொறுப்பேற்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சிறந்த நண்பர்
இந்தியாவில் கடந்த 1998களில் சச்சின் டெண்டுல்கருடன் பழகும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் ஆனால் அவருக்கு இந்திய ரசிகர்களிடம் இருக்கும் புகழ் குறித்து சென்னையில் தான் தனக்கு தெரியவந்ததாகவும் அக்தர் கூறியுள்ளார். அவரை ரசிகர்கள் கடவுளாக மதித்ததை கண்டு தான் மிரண்டதாகவும் தெரிவித்துள்ளார். தான் கடந்த 1998ல் இந்தியாவில் பௌலிங் செய்தபோது தனக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்ததாகவும் அக்தர் மேலும் கூறியுள்ளார்.