யூடியூப் மூலம் தொடர் வர்ணனை
முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தொடர்ந்து தன்னுடைய யூடியூப் பக்கத்தின் மூலம் பரபரப்பாக செயல்பட்டு வருபவர், தொடர்ந்து பல்வேறு சர்ச்சை பேச்சுக்களையும், கிரிக்கெட் மற்றும் வீரர்கள் குறித்த வர்ணனைகளையும் வைத்து வருபவர். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சமீபத்தில் இவர் உல்லாசமாக வெளியில் சுற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கொரோனா வைரஸ் நிதி
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவை போலவே பாகிஸ்தானும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. அங்கும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தான் பங்கேற்கும் 3 போட்டிகளை கொண்ட தொடரை நடத்தி அதன்மூலம் நிதி திரட்டி இரண்டு நாடுகளும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியிருந்தார். இதற்கு முன்னாள் வீரர்கள் கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் ஷாகித் அப்ரிடி ஆகியோர் பதிலளித்திருந்தனர்.
மார்தட்டும் சோயிப் அக்தர்
இந்நிலையில், விராட் கோலிக்கு எதிராக தான் பந்து வீசினால், அவரை வீழ்த்தும் வல்லமை தனக்கு உள்ளது என்று சோயிப் அக்தர் கூறியுள்ளார். விராட் கோலிக்கு எதிராக தான் பந்துவீசினால், வைட் பந்தை வீசி, அவரை வீழ்த்துவேன் என்றும் அல்லது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி அவரை அவுட் ஆக்குவேன் என்றும் அக்தர் கூறியுள்ளார்.
வம்பிழுத்த சோயிப் அக்தர்
சர்வதேச அளவில் விராட் கோலியை வீழ்த்த அனைத்து நாட்டு பௌலர்களும் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றனர். சமீப காலங்களில் விராட்டின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டாலும் எப்போதுமே பௌலர்களின் பந்துவீசி அவுட்டாக்க விருப்பம் கொள்ளும் வீரராக விராட் கோலி உள்ளார். மேலும் சோயிப் அக்தரும் தனக்கு பிடித்த வீரராக விராட் கோலியை முன்னதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.