பரபரப்பு பேச்சு
சமீபத்தில் ஒரு பேட்டியில் கார்கில் போரில் தான் சண்டை போட தயாராக இருந்ததாகவும், இந்திய விமானங்கள் தங்கள் மரங்களை அழித்ததாகவும் பரபரப்பாக பேசி இருக்கிறார். சோயப் அக்தர் எதற்காக இப்படி பரபரப்பாக பேசி வருகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கார்கில் போர்
1999ஆம் ஆண்டு மே இறுதியில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே கார்கில் போர் துவங்கியது. ஜூலை வரை நீடித்த அந்த போரில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். அது பற்றி தற்போது பரபரப்பை கிளப்பும் வகையில் பேசி இருக்கிறார் அக்தர்.
என்ன சொன்னார் அக்தர்?
சோயப் அக்தர் அந்த போர் நடந்த போது தனக்கு கிடைத்த கவுன்டி கிரிக்கெட் வாய்ப்புக்களை மறுத்ததாகவும், அந்த அணிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறி உள்ளார். மேலும், தான் கார்கில் பங்கேற்க தயாராக இருந்ததாகவும் கூறி உள்ளார்.
1.71 கோடி ஒப்பந்தம்
இது பற்றி அக்தர் கூறுகையில், "இந்த கதை பற்றி மக்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும். எனக்கு 1.71 கோடி மதிப்பில் நாட்டிங்கம்ஷையர் அணியில் ஆட ஒப்பந்தம் கிடைத்தது. 2002இலும் எனக்கு பெரிய ஒப்பந்தம் கிடைத்தது. ஆனால், கார்கில் போர் நடந்ததால் நான் அதை மறுத்து விட்டேன்" என்றார்.
சேர்ந்தே மடிவோம்
"நான் லாகூருக்கு வெளியே நின்று கொண்டு இருந்தேன். ஒரு இராணுவ ஜெனரல் என்ன செய்கிறாய் என என்னிடம் கேட்டார். நான் போர் துவங்கப் போகிறது. நாம் அனைவரும் சேர்ந்தே மடிவோம் என்றேன்." என கார்கில் போரில் தான் பங்கேற்க தயாராக இருந்ததாக கூறினார் அக்தர்.
அணிகள் அதிர்ச்சி
மேலும், "நான் கவுன்டி அணிகளிடம் இருந்து இரண்டு முறை இப்படி விலகியதால் அந்த அணிகள் அதிர்ச்சி அடைந்தன. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. காஷ்மீரில் இருந்த என் நண்பர்களை நான் அழைத்து போரிட நான் தயாராக இருப்பதாக கூறினேன்." என்றார் அக்தர்.
விமானங்கள்
"இந்தியாவில் இருந்து விமானங்கள் வந்து, எங்களின் சில மரங்களை சாய்த்தது. அது எங்களுக்கு பெரிய இழப்பு. அவைகள் 6 - 7 மரங்களை சாய்த்தது. நாங்கள் இப்போது மரங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறோம். அது குறித்து மிகவும் காயம் அடைந்தேன்" எனக் கூறி இருக்கிறார் சோயப் அக்தர்.
சர்ச்சை
சோயப் அக்தரின் இந்த பேச்சால் சர்ச்சை கிளம்பி உள்ளது. இந்தியா - சீனா எல்லையில் இன்னும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், அக்தர் ஏன் கார்கில் போரை நினைவுகூரும் வகையில் பேசி இருக்கிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.