அதிரடி துவக்க வீரர்
உலக அளவில் அதிரடி துவக்க வீரர்கள் வரிசையை எடுத்தால் பல ஜாம்பவான் வீரர்களே சேவாக் பெயரைத் தான் முதலில் கூறுவார்கள். கிரிக்கெட் உலகின் சிறந்த துவக்க வீரர்களில் சேவாக்குக்கு எப்போதும் இடம் உண்டு. அதிலும் அதிரடி பேட்ஸ்மேன் என்ற வரிசையில் எப்போதும் தனி இடம் உண்டு.
உலகக்கோப்பை வென்றவர்
2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை என இந்திய அணியின் இரண்டு மறக்க முடியாத உலகக்கோப்பை வெற்றிகளில் பங்கேற்றவர் சேவாக். எந்தா பந்துவீச்சாளருக்கும் அஞ்சாத ஒரே வீரர் இவர் மட்டும் தான்.
எதிரணிகள் திட்டம்
அதிரடி மன்னன் சேவாக் விக்கெட்டை வீழ்த்த எதிரணிகள் தனியாக திட்டம் போடும். அந்த அளவுக்கு அபாயமான ஆட்டக்காரர். டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை முச்சதம் அடித்த வீரர் என அவரது பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒப்பிட்டு பேசிய அக்தர்
சர்வதேச கிரிக்கெட்டில் 17,253 ரன்கள் குவித்துள்ளார் சேவாக். அவரை பாகிஸ்தான் வீரர் இம்ரான் நாசிருடன் ஒப்பிட்டு பேசி உள்ளார் சோயப் அக்தர். ஒப்பிட்டுப் பேசியதில் கூட தவறில்லை. இம்ரான் நாசிர் அளவுக்கு சேவாக்குக்கு திறமை இல்லை என சர்ச்சை பேச்சை பேசி உள்ளார் அக்தர்.
இம்ரான் நாசிர் ஆடிய போட்டிகள்
இம்ரான் நாசிர் 1999இல் பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆனார். அவர் சரியாக ஆடாததால் அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். அவர் 8 டெஸ்ட் போட்டிகள், 79 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். அவர் இந்த போட்டிகளில் எடுத்த ரன்கள் - 427, 1895 மற்றும் 500.
திறமைசாலி
இம்ரான் நாசிரை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சரியாக ஆதரிக்கவில்லை. சரியாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற சோயப் அக்தர், அவர் சேவாக்கை விட திறமைசாலி என குறிப்பிட்டார். அதை அவர் கூறிய விதம் தான் தவறாக இருந்தது.
சேவாக் திறமை
"சேவாக் போன்ற மூளையை இம்ரான் நாசிர் பெறவில்லை. இம்ரான் நாசிர் அளவுக்கு திறமையை சேவாக் பெற்று இருக்கவில்லை. இருவரின் திறமையை நான் ஒப்பிடவில்லை. நாங்கள் இம்ரான் நாசிரை தக்க வைக்க முயன்றோம்." என்றார் அக்தர்.
அதிரடி சதம்
"அவர் இந்திய அணிக்கு எதிராக அதிரடி சதம் அடித்த போது, இம்ரான் நாசிரை தொடர்ந்து ஆட வைக்க வேண்டும் என்றேன். அவர்கள் அதை கேட்கவில்லை. எங்களுக்கு எங்கள் சிறந்த வீரர்களை எப்படி நடத்த வேண்டும் என தெரியாதது துரதிர்ஷ்டவசமானது" என்றார் அக்தர்.
அனைத்து ஷாட்களும் இருந்தன
"நாங்கள் சேவாக்கை விட சிறந்த வீரரை ஆட வைத்திருக்க முடியும். அவரிடம் அனைத்து ஷாட்களும் இருந்தன. நல்ல பீல்டராகவும் இருந்தார். அவரை சிறப்பாக கையாண்டிருக்க முடியும். ஆனால், நாங்கள் செய்யவில்லை" என்றார் அக்தர்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
சோயப் அக்தரின் இந்த சர்ச்சைப் பேச்சால் இந்திய ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். சமூக வலைதளத்தில் சிலர் சோயப் அக்தர், சேவாக்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கூறி வருகின்றனர். சிலர் சோயப் அக்தருக்கும் மூளை குறைவாக உள்ளது என கிண்டல் செய்துள்ளனர்.