மழையால் கிலி
இந்த நிலையில்தான் மான்செஸ்டர் நகரில், ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில், நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும், லீக் போட்டி நடைபெற உள்ளது. ஆனால், நாளை, மான்செஸ்டர் நகரில் மழை பெய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இருநாட்டு ரசிகர்களுக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
யுத்தம்
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்பது கிரிக்கெட் என்பதை தாண்டி ஒரு யுத்தம் போல பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் நேருக்கு நேர் விளையாடுவதை தவிர்த்து வரும் நிலையில், ஐசிசி தொடர்களில் தான் இவை மோதுகின்றன என்பதால் இந்த ஆவல் மேலும் அதிகரிக்கிறது. இது மட்டுமின்றி டிவி சேனல்களுக்கு கிடைக்கும், விளம்பர பணம், ஸ்பான்சர்கள் கொடுக்கக்கூடிய தொகை, என இந்தியா-பாகிஸ்தான் போட்டியை சுற்றி, பெரும், வணிகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
|
சோயப் அக்தர்
இத்தனை நிகழ்வுகளுக்கும், மான்செஸ்டர் மழை வேட்டு வைத்து விடும் சூழ்நிலை வந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிவேகப் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இதைக் கேலி செய்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா கேப்டன் கோலி மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் ஆகியோர் டாஸ் போட்டு விட்டு மைதானத்தை விட்டு வெளியே வருவதற்குள் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து விடும் என்றும், அவர்கள் நீந்தி தான் வரவேண்டும் என்றும் ஒரு மீம் ஷேர் செய்துள்ளார்.
குலுக்கல்
இது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்திய ரசிகர்கள் கோபத்தில், அவருக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள். மழையால் தொடர்ந்து ஆட்டம் பாதிக்கப்படுவதால், பேசாமல் குலுக்கல் முறையில் உலக கோப்பை யாருக்கு என்பதை, முடிவு செய்து, கொடுத்து விடலாம் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதேநேரம் மழையால் பாதிக்கப்படக்கூடிய லீக் போட்டிகளுக்கு ரிசர்வ் டே, எனப்படும் மற்றொரு நாள் விளையாடும் வாய்ப்பை வழங்குவது இயலாத காரியம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவற்றுக்கு மட்டுமே ரிசர்வ் டே வழங்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.