டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. அந்த தொடரின் முதல் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம் நிறைவடைந்து இரண்டாம் இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.
மாற்று வீரராக சர்ப்ராஸ் அஹ்மது
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மது மாற்று வீரராக இடம் பெற்றுள்ளார். அவர் 2019 உலகக்கோப்பை தோல்விக்கு பின் கடுமையான விமர்சனத்தை சந்தித்தார். அடுத்த சில மாதங்களில் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இடம் கிடைத்தது
பின்னர், அணியில் இருந்தே மொத்தமாக நீக்கப்பட்டார் சர்ப்ராஸ் அஹ்மது. அதன் பின் அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற நிலையில் அந்த குழுவில் அவருக்கும் இடம் கிடைத்தது.
மாற்று வீரர் மட்டுமே
அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் அவர் மாற்று வீரராக டெஸ்ட் அணியில் இடம் பெற்றார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன சர்ப்ராஸ் அஹ்மதுக்கு பதில் பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.
தண்ணீர் எடுத்துச் சென்றார்
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது சர்ப்ராஸ் அஹ்மது களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச் சென்றார். அப்போதே வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள், ரசிகர்கள் அவர் ஏன் தண்ணீர் எடுத்து வருகிறார்? என கேள்வி எழுப்பினர்.
ஷூ ஏந்தி வந்தார்
அடுத்து முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்த போது ஒரு வீரருக்கு ஷூவை எடுத்துக் கொண்டு களத்துக்குள் வந்தார் சர்ப்ராஸ் அஹ்மது. அதைக் கண்ட பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்கள் கடும் கோபம் கொண்டனர்.
சோயப் அக்தர் விளாசல்
முன்னாள் வீரர் சோயப் அக்தர் இது பற்றி கூறுகையில் நான்கு ஆண்டுகள் பாகிஸ்தான் அணியை வழிநடத்தி, நாட்டுக்காக சாம்பியன்ஸ் ட்ராபி வென்று கொடுத்த கேப்டனை ஷூவை சுமக்க வைத்து இருக்கிறீர்கள். அதை அவரே செய்து இருந்தால் அவரை தடுத்து நிறுத்துங்கள். வாசிம் அக்ரம் எனக்காக எப்போதும் ஷூவை எடுத்துக் கொண்டு வந்ததில்லை என்றார்.
விளக்கம்
மற்ற மாற்று வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததால் சர்ப்ராஸ் அஹ்மது சக வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தார். அதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான மிஸ்பா உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார்.
மற்ற மூத்த வீரர்கள்
முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் இது குறித்து கூறுகையில், மூத்த வீரர்கள் முகமது ஆமிர், வாஹாப் ரியாஸ் அணியின் உடையை கூட அணியாமல் பயிற்சி உடையில் இருந்ததை சுட்டிக் காட்டி சர்ப்ராஸ் அணிக்காக இதை செய்துள்ளார். இது நடந்திருக்கக் கூடாது என விமர்சித்துள்ளார்.