டேனிஷ் கனேரியா
டேனிஷ் கனேரியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சிறந்த சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்தார். 61 டெஸ்ட் போட்டிகளில் 261 விக்கெட்கள் வீழ்த்தி அபாரமாக செயல்பட்டார். 18 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.
தயங்கினார்கள்
அவர் பாகிஸ்தான் தேசிய அணியில் ஆடிய போது அவர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் சில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அவரிடம் வேற்றுமை காட்டியதாகவும், சிலர் அவருடன் அமர்ந்து உணவு உண்ணக் கூட தயங்கினார்கள் எனக் கூறி இருக்கிறார் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர்.
அக்தர் அளித்த பேட்டி
பி-டிவி ஸ்போர்ட்ஸ் எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஷோயப் அக்தர், இந்த பரபரப்பான விஷயத்தைப் பற்றி பேசி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார். எனினும், அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.
சண்டை போட்டுள்ளேன்
இது பற்றி அக்தர் கூறுகையில், "என் கிரிக்கெட் வாழ்வில் அணியில் இரண்டு, மூன்று பேருடன் பிராந்தியவாதம் குறித்து பேசியதற்காக நான் சண்டை போட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.
அக்தரின் கேள்வி
மேலும், "கராச்சியில் இருந்து வந்தவர், பஞ்சாப் அல்லது பெஷாவரில் இருந்து வந்தவர் யார்" போன்ற விஷயங்கள் கோபமூட்டுபவை. இதுவே இப்படி என்றால், ஹிந்துவாக இருக்கும் ஒருவர் அணிக்காக சிறப்பாக ஆடினால் என்ன நடக்கும்?" என்று கேள்வி எழுப்பினார் அக்தர்.
அவர் எப்படி உணவு எடுக்கலாம்?
"அவர்கள் (பாகிஸ்தான் வீரர்கள் சிலர்) "இந்த இடத்தில் இருந்து அவர் எப்படி உணவு எடுக்கலாம்?" என்று கேட்பார்கள்" என்று டேனிஷ் கனேரியா மற்ற பாகிஸ்தான் வீரர்களுடன் அமர்ந்து உணவு உண்ணும் போது சிலர் எழுப்பிய கேள்விகள் பற்றி குறிப்பிட்டார்.
வென்று கொடுத்தார் கனேரியா
"அதே ஹிந்து தான் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்தார். பாகிஸ்தான் அணிக்காக பை நிறைய விக்கெட்களை அவர் எடுத்தால், அவர் நிச்சயம் அணியில் ஆட வேண்டும்" என்று கூறினார் அக்தர்.
அங்கீகாரம் வழங்க மாட்டார்கள்
மேலும், "கனேரியாவின் முயற்சி இல்லாமல் நம்மால் அந்த தொடரை வென்று இருக்க முடியாது. ஆனால், பலர் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்க மாட்டார்கள்" என்று குற்றம் சுமத்தினார் அக்தர்.
புகைச்சல்
டேனிஷ் கனேரியா சந்தித்த பிரச்சனைகள் பற்றி ஷோயப் அக்தர் வெளிப்படையாக கூறி இருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் புகைச்சலை உண்டாக்கி இருக்கிறது.
கனேரியாவுக்கு தடை
டேனிஷ் கனேரியா கடந்த 2009 ஆம் ஆண்டு கவுன்டி போட்டிகளில் எசக்ஸ் அணிக்காக ஆடிய போது ஸ்பாட் பிக்ஸிங் செய்த புகாரில் இங்கிலாந்து அணியால் அவருக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின் பாகிஸ்தான் அணி அவரை அணியில் சேர்த்துக் கொள்ளவில்லை.