ஸ்ரேயாஸின் சிறப்பான ஆட்டம்
விராட் கோலிக்கு மாற்றாக வாய்ப்பு பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர், முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்தினார். சீனியர் வீரர்களே தடுமாறிய பிட்ச்-ல் 171 பந்துகளை சந்தித்து 105 ரன்களை குவித்தார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே சதமடித்த 16வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும் இந்திய அணியும் முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது.
மீண்டும் அரைசதம்
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் குவித்தது. 49 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதால் அதிக ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் மீண்டும் சீனியர் வீரர்கள் சொதப்பினர். இறுதியில் மிடில் ஆர்டரில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தான், அரைசதம் விளாசி அணியை மீட்டார். 125 பந்துகளை சந்தித்த அவர் 65 ரன்களை குவித்தார். இதனால் பெரும் சாதனை அவரை வந்து சேர்ந்தது.
புதிய சாதனை
அதாவது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை அவரை சென்றடைந்தது. இந்நிலையில் இந்த சாதனைகாக ஸ்ரேயாஸுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை வைரலாகி வருகிறது. 2வது இன்னிங்ஸில் அவுட்டாகி அவர் பெவிலியன் திரும்பும்போது அணி வீரர்கள் மட்டுமின்றி டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாப், இந்திய அணி நிர்வாகிகள் என அனைவரும் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
வைரல் புகைப்படம்
இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த வேளையில் ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி 234 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் நிச்சயம் இடம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.