157 ரன்களை எடுத்த டெல்லி கேபிடல்ஸ்
ஐபிஎல்லின் இரண்டாவது போட்டி நேற்று துபாயில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்டுகளில் 157 ரன்களை குவித்தது. அணியின் வீரர்கள் முதலில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடி ரன்களை உயர்த்தினர்.
வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ்
இதையத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 60 பந்துகளில் 89 ரன்கள் அடித்தும் அணியால் வெற்றியை கைகொள்ள முடியவில்லை. மாறாக சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் காகிசோ ரபடா சிறப்பாக பந்துவீசி கே.எல் ராகுல் மற்றும் நிகோலஸ் பூரன் கூட்டணியை 2 ரன்களில் சுருட்டினார். இதனால் வெற்றி டெல்லி கேபிடல்ஸ் வசமானது.
வெற்றி நாயகன் ரபடா
இந்நிலையில், இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ், காகிசோ ரபடா வெற்றி நாயகன் என்று புகழ்ந்துள்ளார். வித்தியாசமான கோணங்களில் போட்டி சென்றதை சுட்டிக் காட்டியுள்ள ஐயர், கடந்த சீசன்களிலும் இதை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். ரபடாவின் சிறப்பான பௌலிங்கால் மட்டுமே தங்களால் வெற்றியை பெற முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரவிசந்திரன் அஸ்வின் காயம்
மேலும் ஸ்டாய்னிசின் சிறப்பான ஆட்டத்தையும் அவர் புகழ்ந்துள்ளார். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினின் காயம் குறித்தும் பேசிய ஐயர், அவர் அடுத்த போட்டிக்கு தான் தயாராகிவிடுவேன் என்று தெரிவித்தது குறித்து கூறினார். ஆயினும் மருத்துவ குழுவினரே இதில் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.