டிசம்பர் 19ல் ஏலம்
ஆண்டுதோறும் சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ளாகும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக அணிகள் தற்போதே தயாராகி வருகின்றன. வரும் டிசம்பர் 19ம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் தற்போதே சிறந்த வீரர்களை தங்களது அணிக்காக களமிறக்க அணிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
ஷ்ரேயாஸ் ஐயர் நீடிப்பாரா?
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 2020 ஐபிஎல் போட்டிகளில் விளையாட தற்போது சிறந்த ஆட்டக்காரர் அஜிங்க்யா ரஹானே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
"ஏலத்திற்காக காத்திருக்க முடியவில்லை"
அணியில் ரஹானே மற்றும் அஸ்வின் இணைக்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர், அவர்களுடன் இணைந்து விளையாட தான் காத்திருப்பதாகவும் ஏலத்திற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் வீடியோ பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ டெல்லி கேபிடல்ஸ் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அணியின் வெற்றி இலக்கு
மேலும் அந்த வீடியோவில், 2020 ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நீடித்து அணியின் வெற்றியை இலக்காக வைத்து விளையாடுவேன் என்றும் ஷ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயரின் விடாமுயற்சி
கடந்த 2018ல் டெல்லி டேர்டெவில்சாக ஐபிஎல்லில் இந்த அணி விளையாடிய நிலையில், இடையில் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை அடுத்து, கேப்டனாக களமிறங்கினார் ஷ்ரேயாஸ் ஐயர். அந்த தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் கடைசி இடத்தை பிடித்தது. இந்த ஆண்டும் அவர் கேப்டனாக தொடர்ந்த விளையாடி, அணியை 3வது இடத்திற்கு முன்னேற்றினார்.
ரசிகர்கள் கேள்வி
ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஷிகர் தவான், அமித் மிஸ்ரா மற்றும் இஷாந்த் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் உள்ளநிலையில் தற்போது ரஹானே மற்றும் அஸ்வின் இணைந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே தாங்கள் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகளின் கேப்டன்களாக இருந்துள்ள நிலையில், தற்போது ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன் பதவி கேள்விக்குள்ளாகியுள்ளது.