இலங்கை சுற்றுப்பயணம்
இந்திய அணி வரும் ஜூலை மாதத்தில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பார்கள் என்பதால் இலங்கை தொடரில் இந்திய 'பி' அணி தான் விளையாடவுள்ளது. இவர்களை வழிநடத்தும் கேப்டன் யாராக இருக்கும் என்ற கேள்வி தான் சமீப நாட்களாக இணையத்தில் உலா வருகிறது.
கேப்டன் யார்?
ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவர்தான் நிச்சயமாக கேப்டனாக செய்யப்படுவார். ஆனால் அவருக்கு செய்துள்ள அறுவை சிகிச்சையின் படி குறைந்தது 4 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனக்கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியை வழிநடத்த ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
முற்றுப்புள்ளி
இந்நிலையில் அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ரேயாஸ். அவர் தனது வீட்டிலேயே தீவிர உடற்பயிற்சி செய்து தன்னை தயார் படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் ட்விட்டர் கேப்சனில், " இங்கு வேலை நடந்துக்கொண்டிருக்கிறது கொஞ்சம் கவனமாக பாருங்கள்" எனக்குறிப்பிட்டுள்ளார். இது ஷிகர் தவான் - ஹர்திக் இடையேயான கேப்டன்ஷிப் போட்டியை குறிப்பிடும் வகையில் தானும் தயாராக தான் இருப்பதாக மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
வாய்ப்பு
டி20 உலகக்கோப்பைகான அணி தேர்வுக்கு இலங்கை சுற்றுப்பயணம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் சிறப்பாக ஆடும் வீரர்கள் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எனவே இந்த தொடரை விட்டுவிடக்கூடாது என்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொடரில் பங்கேற்று தன்னை நிரூபிக்காவிட்டால் அடுத்தடுத்த தொடர்களிலும் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். ஏனென்றால் அதற்குள் இளம் வீரர்கள் பலர் அவரின் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.