சிறப்பான ஆட்டம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் ஓப்பனிங்கும், விராட் கோலியின் இடத்தில் சுப்மன் கில்லும் களமிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ராகுலுக்கு காயம் ஏற்பட்டதால் ஸ்ரேயாஸ் தனது அறிமுக டெஸ்டில் களமிறங்கினார். இந்திய அணியில் சீனியர் வீரர்களான புஜாரா, ரகானே ஆகியோரே சொதப்பிய நிலையில் ஸ்ரேயாஸ் என்ன செய்துவிடப்போகிறார் என கேள்வி இருந்து.
சாதனை சதம்
ஆனால் எந்தவித பதற்றமும் இன்றி அவர் ஆடியது அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், சதமடித்து அசத்தினார். அதில் 13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணியில் அறிமுக டெஸ்டிலேயே சதமடித்த 16வது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் பெற்றார்.
மனம் திறந்த ஸ்ரேயாஸ்
இந்நிலையில் அதுகுறித்து ஸ்ரேயாஸ் பேசியுள்ளார். நான் கான்பூருக்கு வந்த போது, ப்ளேயிங் 11ல் இடம்பெற்று விளையாடுவேனா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ராகுல் டிராவிட் மற்றும் ர்கானே என்னிடம் வந்து தகவலை தெரிவித்தனர். இதனால் சட்டென அவசர அவசரமாக டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தயாரானேன். ஏனென்றால் கடைசியாக நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி 3 ஆண்டுகள் இருக்கும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சோதித்து பார்க்கும் எண்ணத்தில் களமிறங்கினேன்.
திடீர் பதற்றம்
நாம் நீண்ட காலமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தால், திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்புவது சிரமமாக இருக்கும். அந்த மனநிலை சட்டென யாருக்கும் வந்துவிடாது. இதனால் தான் நான் எப்படி சமாளித்து விளையாட போகிறேன் என பதற்றத்தில் இருந்தேன்.
கவாஸ்கர் மூலம் அறிமுகம்
கவாஸ்கர் கையில் தொப்பியை வாங்கியது குறித்து பேசிய ஸ்ரேயாஸ், நான் கவாஸ்கர் சாரிடம் இருந்து கேப்பை பெறுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ராகுல் டிராவிட் தான் கொடுப்பார் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அந்த ஜாம்பவானுக்கு பதிலாக இந்த ஜாம்பவான் வழங்கினார். அவர்களில் யார் கொடுத்திருந்தாலும் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். அனைத்தும் மகிழ்ச்சியாக இருந்தாலும், நான் அவுட்டான விதம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என தெரிவித்துள்ளார்.