ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், பவுண்டரி லைனில் ஒரு பந்தை தடுக்க முயன்ற போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ்
தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் மூட்டு விலகியது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஒருநாள் தொடரிலிருந்து மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் அவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
8ம் தேதி அறுவை சிகிச்சை
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயருக்கும் வரும் 8ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு பூரண ஓய்வில் அவர் இருக்க வேண்டும் என்றும் 4 முதல் 5 மாதங்களுக்கு அவர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் பங்கேற்க மாட்டார்
இதையடுத்து ஐபிஎல் மட்டுமின்றி அடுத்ததாக நடைபெறவுள்ள நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையில் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள டி20 தொடர்களிலும் அவர் பங்கேற்பது சிரமம் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.