3வது டி20 போட்டி
முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய ராகுல் திரிபாதி களத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார். 22 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசினார். எனினும் இஷ் சௌதி ஓவரில் துரதிஷ்டவசமாக அவுட்டாகி அரைசதத்தை பூர்த்தி செய்யாமல் சென்றார். மறுமுணையில் தூண் போல நிலைத்து நின்ற சுப்மன் கில் தனி ஆளாக வாண வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார்.
இமாலய இலக்கு
63 பந்துகளை சந்தித்த சுப்மன் கில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 126 ரன்களை விளாசினார். டி20 கிரிக்கெட்டில் சொதப்புகிறார் என்று விமர்சனம் இருந்த சூழலில் முதல் சதத்தை அடித்து பதிலடி கொடுத்தார். வழக்கமாக அதிரடி காட்டும் சூர்யகுமார் யாதவ் 12 பந்துகளில் 24 ரன்களை அடித்து வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கடைசி நேரத்தில் 17 பந்துகளில் 30 ரன்களை அடிக்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்களை குவித்தது.
சரிந்த நியூசிலாந்து
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இன்றைய நாள் மிகவும் மோசமானதாக அமைந்தது. தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் (3), டெவோன் கான்வே (1) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த மார்க் சாப்மேன் (0), க்ளென் பிலிப்ஸ் (2) என இந்தியாவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டினர். குறிப்பாக இந்தியாவின் ஃபீல்டிங் இன்று ஆச்சரியம் தந்தது.
வரலாற்று வெற்றி
ஃபீல்டிங் என்றாலே நியூசிலாந்து தான் நம்பர் 1 என இருக்கும். ஆனால் இன்று சூர்யகுமார் யாதவ் பிடித்த 3 கேட்ச்-கள் ஒட்டுமொத்த மைதானத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனால் மொத்தமுள்ள 11 வீரர்களில் 9 வீரர்கள் வெறும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேறினர். அதிகபட்சமாக டேரில் மிட்செல் மட்டுமே 35 ரன்களை மட்டுமே அடிக்க, 66 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது.168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார இமாலய கண்டது. டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் அதிக வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இதுவே ஆகும்.
இந்தியாவின் பெருமை
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 - 1 என கைப்பற்றியதுடன், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 13 டி20 தொடர்களில் வெற்றியை மட்டுமே பெற்ற அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.