அறிமுக போட்டியில் கில்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் தனது அறிமுக போட்டியில் பங்கேற்று விளையாடினார் இந்திய வீரர் சுப்மன் கில். அந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய அவர் 259 ரன்களை குவித்தார். குறிப்பாக பிரிஸ்பேனில் ஆடிய இறுதிப் போட்டியில் 91 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
பல்வேறு தரப்பினரும் பாராட்டு
இதையடுத்து சுப்மன் கில்லின் நிலையான ஆட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் அணியிலும் கில் இடம்பெற்றுள்ளார். ரோகித் சர்மாவுடன் இணைந்து அவர் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பான துவக்க வீரர்
இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் சிறப்பான துவக்க வீரராக சுப்மன் கில் விளங்குவார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான துவக்க வீரராக அடுத்த 10 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் அவருக்கு உள்ளதாகவும் அவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிராட் ஹாக் பாராட்டு
ஆஸ்திரேலிய தொடரில் ஆஸ்திரேலிய பௌலர்கள் அவருக்கு ஷார்ட் பால் போன்றவற்றை போட்டு சோதித்ததாகவும் அவர் அதை ஒரு ஜாம்பவானை போல எதிர்கொண்டதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளின் சிறப்பான துவக்க வீரராக உலகம் அவரை பார்க்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.