சென்னை: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் மூன்றாவது சீசனின் சாம்பியன் பட்டத்தை சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி பெற்றது. நேற்று இரவு நடந்த பைனலில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை மதுரை வென்றது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் மூன்றாவது சீசன் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்தது. மொத்தம் 8 அணிகள் இந்த சீசனிலும் விளையாடின. இரண்டாவது சீசன் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி மற்றும் 2016 சாம்பியன் ஜோன்ஸ் டூடி பாட்ரியாட்ஸ் அணி லீக் சுற்றிலேயே வெளியேறின.
லீக் சுற்று மற்றும் பிளே ஆப் சுற்றுகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பைனல் போட்டி நடந்தது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சியாசெம் மதுரை பாந்தரஸ் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய திண்டுக்கல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஜெகதீசன் 51, கடைசி நிலை வீரர்கள் மொகம்மது 17, ரோஹித் 15 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.
மதுரையின் அபிஷேக் தன்வார் 3.5 ஓவர்களில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். லோகேஷ் ராஜ் 3, வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய மதுரை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. கே.பி. அருண் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்தார். ஷாஜித் சந்திரன் 38 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு உதவினார்.
இறுதியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வென்றது. இதன் மூலம், டிஎன்பிஎல் டி-20 போட்டியின் மூன்றாவது சீசன் சாம்பியனானது மதுரை.
சாம்பியன் மதுரை அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகையும், இரண்டாவது இடத்தைப் பிடித்த திண்டுக்கல் அணிக்கு ரூ.60 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.