திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் பைனலுக்கு மதுரை முன்னேறியது. நேற்று நடந்த இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் கோவையை 7 விக்கெட்டில் வென்றது மதுரை.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் குவாலிபையரில் வென்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஏற்கனவே பைனல் முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் முதல் குவாலிபையரில் தோல்வியடைந்த சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும், எலிமினேட்டரில் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணியும் நேற்று நடந்த இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் விளையாடின.
முதலில் விளையாடிய கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அஸ்வின் வெங்கடராமன் 45, எம்.பி. ராஜேஷ் 29, அபினவ் முகுந்த் 28 ரன்கள் எடுத்தனர். மதுரையின் அபிஷேக் தன்வர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய மதுரை அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வென்றது. அருண் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 79 ரன்கள் எடுத்தார். டி.ரோஹித் 30 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை வென்றது. கடந்த இரண்டு சீசன்களில் 14 ஆட்டங்கள் மற்றும் இந்த சீசனின் முதல் ஆட்டம் என, தொடர்ந்து 15 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது மதுரை. ஆனால், இந்த சீசனில் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்று, முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இரண்டாவது குவாலிபையரில் கோவையை வென்றதன் மூலம் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது மதுரை, சென்னையில் நாளை நடக்கும் பைனலில், மதுரை, திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன.