சென்னை: டிஎன்பிஎல் மூன்று சீசன்களில் தொடர்ந்து 15 தோல்விகளை சந்தித்த அணி என்ற நிலையில் இருந்த சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி, இந்த சீசனில் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசன் போட்டிகள் நடக்கின்றன. லீக் சுற்றில் அதிகப் புள்ளிகளைப் பெறும் நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
அதன்படி, தான் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வென்று, 10 புள்ளிகளுடன் சியாசெம் மதுரை பாந்தர்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. திண்டுக்கல் அணியும் பிளே ஆப் முன்னேறியுள்ளது.
கடந்த இரண்டு சீசன்களில் மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ் என்ற பெயரில் விளையாடிய மதுரை அணி, ஒரு வெற்றியைக் கூட பெற்றதில்லை. தற்போது மூன்றாவது சீசனிலும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. தொடர்ந்து 15 போட்டிகளில் தோல்வியடைந்தது மதுரை.
ஆனால், அதன்பிறகு, தான் விளையாடிய 5 ஆட்டங்களிலும் வென்று, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது மதுரை அணி.