கேப்டன் கூல் தோனி
இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு அதிகளவிலான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவரது பொறுமை, குறிப்பாக போட்டிகளின்போது, நெருக்கடிகளை அவர் சமாளிக்கும் விதம் அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்துள்ளது. மேலும் கேப்டன் கூல் என்ற பெயரையும் கொடுத்துள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஐபிஎல் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் அவர் மீண்டும் பங்கேற்று விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இதுகுறித்து ரவி சாஸ்திரி உள்ளிட்ட பல்வேறு முன்னாள், இந்நாள் வீரர்கள் பல்வேறு விதமான கமெண்ட்களையும், எதிர்பார்ப்புகளையும் வெளியிட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்தெல்லாம் எதையும் கவலைப்படாமல் தன்னுடைய குடும்பத்தினருடன் ஊரடங்கு காலத்தில் சிறப்பாக தன் பொழுதுகளை கழித்து வருகிறார் தோனி.
கொண்டாடி மகிழ்ந்த தோனி
கடந்த 7ம் தேதி தன்னுடைய 39வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் தோனி கொண்டாடி மகிழ்ந்தார். ரசிகர்கள், சக வீரர்களின் வாழ்த்து மழையிலும் நனைந்தார். பாண்டியா பிரதர்ஸ் ஒருபடி மேலே சென்று, இந்த குவாரன்டைன் நேரத்திலும், நேரில் சந்தித்து தோனிக்கு வாழ்த்து தெரிவித்தனர். உள்ளூர் ரசிகர்கள் முதல் சர்வதேச ரசிகர்கள் வரை அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.
போட்டிகளில் பங்கேற்கும் தோனி
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா தோற்று வெளியேறிய நிலையில், அதுமுதல் சர்வதேச ஆட்டங்களில் விளையாடாமல் தோனி தவிர்த்து வருகிறார். ஐபிஎல்லில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் செப்டம்பரில் நடத்தப்பட உள்ள ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே சார்பில் தோனிவிளையாடுவது உறுதியாகியுள்ளது.
ஐசிசி முடிவால் கேள்விக்குறி
இந்நிலையில் கொரோனா காரணமாக டி20 உலக கோப்பை 2020, மற்றும் 2021 ஆகிய தொடர்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு ஐசிசி ஒத்தி வைத்துள்ளது. இதனால் மீண்டும் சர்வதேச போட்டிகளில் தோனி விளையாட வேண்டும் என்ற ரசிகர்கள், சக வீரர்களின் கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
ஏற்கனவே தன்னுடைய 39வது வயதை எட்டியுள்ள எம்எஸ் தோனி, இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அப்போது தன்னுடைய 40வது வயதை எட்டும் தோனிக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து எதிர்பார்க்கலாம்
ஆனால் எது எப்படியோ, சிஎஸ்கே அணிக்காக கண்டிப்பாக தோனி களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். தன்னுடைய அணிக்கு 3 முறை ஐபிஎல் கோப்பைகளை பரிசளித்துள்ள தோனியின் கேப்டன்ஷிப்பை சிஎஸ்கே தொடரும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி ரசிகர்களை பரவசப்படுத்துவார் என்று ரசிகர்கள் சந்தோஷப்படலாம்...