சமநிலையில் அணிகள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 4வது மற்றும் இறுதிப்போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதன் 5வது நாள் ஆட்டத்தில் இந்தியா ஆடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் சமநிலையில் உள்ளது.
கவனம் பெற்றள்ள சிராஜ்
இந்நிலையில் தற்போது பிரிஸ்பேனில் நடைபெற்றுவரும் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் பௌலர்
முகமது சிராஜ் முறையே ஒன்று மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார்.
ஆஸி.க்கு நெருக்கடி கொடுத்த சிராஜ்
இந்த தொடரின் துவக்கத்தில் தன்னுடைய தந்தையை இழந்த போதிலும் தன்னுடைய தாய் கொடுத்த நம்பிக்கை மற்றும் ஊக்கத்தின் காரணமாக நாடு திரும்பாமல் தொடர்ந்து ஆடிவருகிறார் சிராஜ். தன்னுடைய சிறப்பான முத்திரைகளையும் பதித்து ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.
எக்ஸாமை தவிர்த்த சிராஜ்
இந்நிலையில் தன்னுடைய பள்ளி நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதற்காக எக்ஸாம் எழுதுவதை சிராஜ் தவிர்த்து விடுவார் என்றும் இதுகுறித்து எக்ஸாம் முடிவுகள் வரும்போது தான் குடும்பத்தினருக்கு தெரியவரும் என்றும் அவரது மூத்த சகோதரர் இஸ்மாயில் சிராஜ் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் விளையாடுவதை காண ஆசை
எக்ஸாம் முடிவுகளில் ஆப்சென்ட் ரிசல்ட் வரும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய தந்தை சிராஜிற்கு மிகுந்த பக்கபலமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைவிட சிராஜ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதையே தன்னுடைய தந்தை மிகவும் விரும்பியதாகவும் அவர் மேலும் கூறினார்.