கராச்சி: இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே அடுத்த 8 ஆண்டுகளில் 6 தொடர்களை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் நாடுகளிடையேயான கடைசி கிரிக்கெட் போட்டிகள் 2012 டிசம்பர் - 2013 ஜனவரி வரை இந்தியாவில் நடைபெற்றது. அதன் பின்னர் இந்தியாவுடனான கிரிக்கெட் உறவை மேம்படுத்த பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் ஆதரவாக வாக்களித்தது. இந்தியாவுடன் மீண்டும் கிரிக்கெட் உறவு என்ற நிபந்தனையின் பேரில்தான் பாகிஸ்தான் இந்த ஆதரவை அளித்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த 8 ஆண்டுகளில் (2015-2023) இந்தியா-பாகிஸ்தான் இடையே 6 தொடர்களை நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டுக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் அடுத்த 8 ஆண்டுகளுக்கான போட்டிகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின், போட்டிகள் நடத்துவதற்கான இறுதிவடித்தை இந்திய கிரிக்கெட் வாரியம் அளிக்கும்.