டிசம்பர் 18ம் தேதி துவக்கம்
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர்கள் வரும் டிசம்பர் 18ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளன. இதையொட்டி பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிற்கு நேற்று முன்தினம் வந்தனர். அங்கு குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.
6 வீரர்களுக்கு கொரோனா
பாகிஸ்தானிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக பாகிஸ்தான் வீரர்கள் 53 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் தற்போது 6 பாகிஸ்தான் வீரர்களுக்கு நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர் கண்காணிப்பு
இதையடுத்து அவர்கள் 6 பேரும் தீவிர குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அடுத்தடுத்து அவர்களுக்கு 4 முறை பரிசோதனைகள் செய்யப்படும் என்றும் நியூசிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அறைகளில் முடங்கிய வீரர்கள்
குவாரன்டைனுடன் சேர்த்து பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது 6 வீரர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் மற்ற வீரர்களும் ஹோட்டல் அறைகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை மேலும் கூறியுள்ளது.
விளையாடுவது அதிர்ஷ்டம்
நியூசிலாந்தில் விளையாடுவது மிகவும் சிறப்பானது என்றும், ஆனால் அதன் கொரோனா விதிமுறைகளை மதித்து வீரர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஆஷ்லே புளூம்பீல்ட் தெரிவித்துள்ளார். கடுமையான விதிமுறைகளை கடைப்பிடித்ததன்மூலம் நியூசிலாந்தில் இதுவரை 1684 கொரோனா பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.