பெங்களூரு: ஏழு அணிகள், 19 நாட்கள் மோதும், கர்நாடக பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 6வது சீசன் ஆட்டங்கள், செப்டம்பர் 1ல் துவங்குகிறது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது, கே.பி.எல்., கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்தும், கர்நாடகா பிரீமியர்லீக் போட்டிகள், தற்போது, 6வது சீசனில் கால்வைத்துள்ளது.
இந்த ஆண்டு, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி, மீண்டும் களமிறங்குகிறது. முதல் இரண்டு சீசனில் விளையாடிய பெங்களூரு பிளாஸ்டர் அணிக்கு ஸ்பான்சர் கிடைக்காததால், அதன்பிறகு விளையாடவில்லை. தற்போது, கல்யாணி மோட்டார்ஸ் ஸ்பான்சர் செய்கிறது. இதைத் தவிர, மேலும், 6 அணிகளும் சாம்பியன் பட்டத்துக்கு போட்டியிட உள்ளன.
மொத்தம் 19 நாட்கள், மைசூரு, ஹூப்ளி, பெங்களூருவில் போட்டிகள் நடக்க உள்ளன.
அதே நேரத்தில், பிரபல நடிகர் சுதீப்பை கேப்டனாக கொண்ட நட்சத்திரங்கள் அடங்கிய ராக்ஸ்டார் அணி, இந்த முறை விளையாடவில்லை.
முதல் போட்டி, செப்டம்பர் 1ம் தேதி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் இரண்டு போட்டிகள் நடக்கும். முதல் போட்டி மாலை 3 மணிக்கும், அடுத்த போட்டி, இரவு 7 மணிக்கும் துவங்கும்.
ஐ.பி.எல்., போல் இல்லாமல், கே.பி.எல்.,லில் புள்ளிப் பட்டியலில் முதல் மற்றும் நான்காம் இடத்தைப் பிடிக்கும் அணிகள், முதல் செமிபைனலில் மோதும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள், மற்றொரு செமி பைனில் மோதும்.
கர்நாடகா பிரீமியர் லீக் போட்டியில் மோதும் அணிகள்:
பெங்களூரு பிளாஸ்டர்ஸ், பீஜபூர் புல்ஸ், பெலகாவி பாந்தர்ஸ், பெல்லாரி டஸ்கர்ஸ், ஹூப்ளி டைகர்ஸ், மைசூரு வாரியர்ஸ், நம்ம சிவமோகா
நடப்பு சாம்பியன்: பீஜபூர் புல்ஸ்