பிசிசிஐ மீது குற்றம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பிறகு, இங்கிலாந்து தொடரை எதிர்நோக்கியுள்ளது இந்திய அணி. ஃபைனல் தோல்வி காரணமாக, ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தது பிசிசிஐ. வீரர்கள் தேர்வு, பயிற்சி போட்டிகள் இல்லாமை என்று முன்னாள் வீரர்கள், எக்ஸ்பெர்ட்ஸ், ரசிகர்கள் என்று பல தரப்பில் இருந்தும் பிசிசிஐ மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால், எதிர்வரும் இங்கிலாந்து தொடரை எப்படியாவது கைப்பற்றியதாக வேண்டும் என்பதில் பிசிசிஐ மிக உறுதியாக உள்ளது.
தெளிவுப்படுத்திய பிசிசிஐ
இந்த சூழலில் தான், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷுப்மன் கில் காயம் காரணமாக விலகினார். இதனால், ரோஹித்துடன் ஓப்பனிங் இறங்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதேசமயம், தற்போது இலங்கை டூரில் இருக்கும் ப்ரித்வி ஷா மற்றும் படிக்கல் ஆகியோரை ரிசர்வ் ஓப்பனர்களாக சேர்க்கலாம் என்று இந்திய அணி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், பிசிசிஐ இந்த கோரிக்கையை நிராகரித்தது மட்டுமில்லாமல், மாயங்க் அகர்வால் தான் ரோஹித்துடன் இறங்கவுள்ள ஓப்பனர் என்பதையும் தெரிவித்துவிட்டது.
புஜாராவுக்கு பதில்
இதில், கேப்டன் விராட் கோலிக்கு 100 சதவிகிதம் உடன்பாடு இல்லையென்றாலும், பிசிசிஐ பேச்சுக்கு மறுபேச்சு ஏது? என்பதால் ஏற்றுக் கொண்டு விட்டாராம். இதனால், அணியில் ஓப்பனிங் ஸ்லாட் பிரச்சனை முடிவுக்கு வந்தது. அதேசமயம், லோகேஷ் ராகுலை மிடில் ஆர்டரில் இறக்கவும் இந்திய அணி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதாவது, கன்சிஸ்டன்சி இன்றி தடுமாறும் புஜாராவுக்கு பதில் ராகுலை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேலன்ஸ்ட் இந்திய அணி
இது தவிர பந்து வீச்சாளர்களும் யார் யார் என்பது ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டுவிட்டதாம். அதன்படி இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, மாயங் அகர்வால், லோகேஷ் ராகுல், விராட் கோலி, அஜின்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஐஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய 11 வீரர்கள் பட்டியலை முதற்கட்டமாக ரெடி செய்துள்ளது இந்திய அணி. இதில், ஜடேஜா அணியில் பதில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் விளையாடலாம் என்று கேப்டன் கோலி முடிவு செய்துள்ளாராம். ஒட்டுமொத்தமாக, ஒரு பேலன்ஸ்ட் இந்திய அணி இப்போதே தயார் செய்யப்பட்டுவிட்டது என்பதே ஸ்பெஷல் தகவல். சூழலுக்கு ஏற்ப அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.
Recommended Video
பக்கா பிளான்
என்னதான் ஒரு அணியை முன்பே தேர்வு செய்தாலும், போட்டி தொடங்கும் அன்றைய நாளின் நிலைமை, மைதான தயாரிப்பு, பிட்ச் ரியாக்ஷன், வீரர்கள் உடல்நிலை இவற்றை கருத்தில் கொண்டு தான் அணி இறுதி செய்யப்படும். ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பே அணியை ரெடி செய்வதற்கான முக்கிய காரணம், வீரர்களை சூழலுக்கும் ஏற்ப தயார் செய்வதற்காக தானாம். அதாவது, தகவமைப்பு. இந்த தகவமைப்பு இல்லாத காரணத்தால் தான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணி தோற்றது என்று கோலி உறுதியாக நம்புகிறாராம். இப்போது முன்கூட்டியே வீரர்களை டிக் செய்தன் மூலம், அவர்கள் இங்கிலாந்தின் சூழலுக்கு ஏற்ப தங்களை மிக விரைவாக தகவமைத்துக் கொண்டு, மன ரீதியாக சவாலுக்கு ரெடியாகிவிடுவார்கள் என்பதே கேப்டன் கோலியின் வியூகமாம். இந்த தகவல் எப்படியோ இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் க்றிஸ் சில்வர்வுட் காதுகளுக்கு செல்ல, சற்றே வியந்து பாராட்டியிருக்கிறாராம். அப்படியே சற்றும் தாமதிக்காமல், இரவு நேரம் என்றும் பார்க்காமல், இங்கிலாந்து அணியின் முக்கிய நிர்வாகிகளையும் அலர்ட் செய்துவிட்டாராம்.