இக்கட்டான நேரத்தில்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் எதிர்பார்த்ததில் பாதியை கூட நிறைவேற்றவில்லை. ரோஹித் தொடங்கி, ஜடேஜா வரை யாருமே இந்தியாவை சரிவில் இருந்து மீட்க போராடியதாக தெரியவில்லை. ஒரு பேட்ஸ்மேன் கூட போராடவில்லை என்பதே இங்கு வேதனையான விஷயம். இப்படி விளையாடுவதற்காகவா, இவ்வளவு சிரமப்பட்டு இறுதிப் போட்டி வரை முன்னேறினார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதிரடியாக ஆடும் ரிஷப் பண்ட்டால் கூட, இக்கட்டான நேரத்தில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த போதும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சை அவர் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
மேலும் ஒரு பின்னடைவு
இதனால் புஜாரா, ஷுப்மன் கில், ரோஹித் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் நிலை குறித்து ஆராய வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் கேள்வி எழுப்பப்டுகிறது. ஏற்கனவே ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கு என தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி கோலிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
கொண்டாடப்பட வேண்டிய வெற்றி
எனினும், உலகக் கோப்பை டைட்டிலை வசமாக்க முடியாமல் பல ஆண்டுகளாக திண்டாடிக் கொண்டிருந்தது நியூசிலாந்து. ஒவ்வொரு சீஸனிலும், ஒவ்வொரு ஐசிசி தொடர்களிலும், அரையிறுதி அல்லது இறுதி வரை முன்னேறி தோற்பது தான் இத்தனை ஆண்டுகாலமாக நியூசிலாந்தின் அமைப்பாக இருந்து வந்தது. குறிப்பாக, 2019 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில், மேட்ச் டிராவாகி, இரண்டு முறை நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிராவாகி, புரியாத புதிர் கணக்கில் இங்கிலாந்திடம் கோப்பையை நியூசிலாந்து பறிகொடுத்தது. இப்படி பலகட்ட சோதனைகளுக்கு பிறகு நியூசிலாந்து டெஸ்ட் கோப்பையை வென்றிருப்பதும் இன்று கொண்டாடப்பட வேண்டிய ஒன்றே.
விடிய விடிய கொண்டாட்டம்
மேட்ச் முடிந்த பிறகு, நியூசிலாந்து வீரர்கள் அன்றைய இரவு முழுவதும் விடிய விடிய வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இந்திய அணி வீரர்களோ, நியூசிலாந்து கோப்பையை ஏந்துவதற்குள் தங்கள் தங்கியிருக்கும் ஹில்டன் ஹோட்டல் அறைக்கு சென்றுவிட்டனர். டிவியில் நாமும் இதனை நேரடியாக காண முடிந்தது. நியூசிலாந்து வீரர்களுக்கு கோப்பை வழங்குவதற்கும், இந்திய வீரர்கள் தங்கள் டிராலியில் உபகரணங்களை எடுத்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறியதை காண முடிந்தது.
எல்லாமே வாமிகா
இதில், மற்ற வீரர்களை விட ஒரு கேப்டனாக தோல்விக்கு பொறுப்பேற்றிருக்கும் விராட் கோலிக்கு தனது ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கும் ஒரே ஆள் அவரது மகள் வாமிகா தான். கைக்குழந்தையான வாமிகா மற்றும் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் தான் விராட் இங்கிலாந்து வந்திருந்தார். இப்போது இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து அறைக்குள் முடங்கியிருக்கும் கோலிக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறார் வாமிகா. குழந்தையுடன் விளையாடுவது, உணவூட்டுவது, டயப்பர் போடுவது, அழுதால் சமாதானம் செய்வது, தூங்க வைப்பது என்று ஒரு தந்தையாக நித்தம் நித்தம் தனது மகளை கவனித்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியை மறக்க தொடங்கியிருக்கிறாராம் விராட் கோலி.
அப்பாவை பக்காவா ரெடி பண்ணி இங்கிலாந்து சீரிஸுக்கு அனுப்பிவிடு பாப்பா!