முதல் பந்தில் விக்கெட்
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியின் முதல் பந்திலேயே ரபாடா, இலங்கை கேப்டன் டிமுத் கருணாரத்னே விக்கெட்டை சாய்த்து மிரட்டல் விடுத்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து இலங்கை எளிதாக மீண்டது. குசால் பெரேரா, பெர்னாண்டோ அந்த அளவுக்கு ஆடினர்.
இலங்கை தடுமாற்றம்
அவர்கள் கூட்டணி 67 ரன்கள் சேர்த்த நிலையில், இருவரும் தலா 30 ரன்கள் எடுத்து ப்ரீடோரியஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதன் பின் இலங்கை பெரும் சிக்கலில் சிக்கியது. சீரான இடைவெளிகளில் இலங்கை பேட்ஸ்மேன்கள் குறைவான ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த வண்ணம் இருந்தனர்.
அசத்தல் பந்துவீச்சு
இலங்கை அணி போராடி 49.3 ஓவர்களில் 203 ரன்களை எட்டியது. தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. ப்ரீடோரியஸ் 3, ரபாடா 2, கிறிஸ் மோரிஸ் 3, பெஹ்ளுக்வாயோ 1, டுமினி 1 விக்கெட் வீழ்த்தினர்.
ஆம்லா, டு ப்ளேசிஸ் அபாரம்
204 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை நோக்கி ஆட வந்த தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் டி காக் 15 ரன்கள் எடுத்த நிலையில் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும், ஆம்லா, பாப் டு ப்ளேசிஸ் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு அணியை வெற்றி பெற வைத்தனர். தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
சதத்தை தவறவிட்டார்
ஆம்லா 80, டு ப்ளேசிஸ் 96 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். டு ப்ளேசிஸ் 4 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். ஆம்லா வெற்றி இலக்குக்கு அருகே வந்த பின் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஆடியது தான் அதற்கு முக்கிய காரணம்.
இலங்கை வெளியேற்றம்
இலங்கை அணி இந்தப் போட்டியின் தோல்வியால் உலகக்கோப்பை அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்தது. ஏற்கனவே, தென்னாப்பிரிக்கா அணியும் அந்த வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.