வீரர்களுக்கு கிடைத்த ஓய்வு
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டுகளை சேர்ந்த வீரர்களுக்கும் கடந்த இரண்டு மாதங்கள் வீட்டிலேயே இருக்க வாய்ப்பு கிடைத்தது. இதுகுறித்து பலர் வருத்தம் தெரிவித்தாலும் ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட சிலர் அதை பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தன்னுடைய உடல் மற்றும் மனவளத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பயிற்சிகள் மேற்கொண்டதாக ஸ்மித்கூறியுள்ளார்.
பயிற்சி முகாமில் வீரர்கள்
ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. இதுவரை 7000 பேர் மட்டுமே அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உள்ளூர் போட்டிகள் ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சி முகாம்களில் இன்று முதல் பங்கேற்றுள்ளனர்.
சரியாக பயன்படுத்திய ஸ்மித்
முதல்கட்டமாக இன்று ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சிட்னி ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் பாதுகாப்பான முறையில் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த இரண்டுமாத ஓய்வை சரியான முறையில் தான் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
சிறப்பான வடிவம்
இந்த இரண்டு மாத காலத்தில் கிரிக்கெட் பேட்டை கையில் தொட சந்தர்ப்பம் கிடைக்காததால் உடல் மற்றும் மனவளத்திற்கு சிறந்த கவனம் கொடுத்து பிட்னஸ் பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், அதிகமாக ரன்னிங், ஜிம் பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவில் தன்னுடைய உடல் ஒரு ஷேப்பிற்கு வந்துள்ளதாகவும் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஓய்வு கிடைத்தது சிறப்பு
கடந்த ஆண்டு உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடருக்கு பின்பு தொடர்ந்து இடைவெளியில்லாமல் போட்டிகளில் பங்கேற்று ஆடிய நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த கேப்பை தான் நல்லவிதமாகவே பார்ப்பதாகவும் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்த இடைவெளியில் தன்னை புதுப்பித்துக் கொள்ள தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.