இருவரும் சரியாக ஆடவில்லை
ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும்தான் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக உள்ளனர். அவர்கள் சோபிக்காவிட்டால் மொத்த அணியும் விழுந்து விடுகிறது. மேலும் இந்திய அணியின் நடுக்கள வீராங்கனைகளும் சரியாக ஆடவில்லை. இதனால்தான் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவ நேரிட்டது என சோப்ரா கூறியுள்ளார்.
சொதப்பிய சீனியர்கள்
இந்தியாவின் ஒட்டுமொத்த பேட்டிங்குமே அந்தத் தொடரில் சரியில்லை. சீனியர்கள் இன்னும் மேம்பட வேண்டும். சீனியர்கள் சரியாக முழுத் திறமையுடன் விளையாடியிருந்தால் நிச்சயம் நாம் சாம்பியன் ஆகியிருப்போம். அதேபோல நடுக்கள வீராங்கனைகளும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறி விட்டனர். வயதை வைத்து ஒருவருடைய அனுபவத்தை நாம் கணிக்கக் கூடாது என நினைக்கிறேன். மாறாக அவர்களது பங்களிப்பை வைத்துத்தான் அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் அஞ்சும் சோப்ரா.
கோலியை உதாரணமாக பாருங்க!
விராட் கோலியை முன்னுதாரணமாக ஹர்மன்ப்ரீத் கவுரும், துணை கேப்டன் ஸ்மிருதியும் எடுத்துக் கொள்ள வேண்டும். கோலியிடம் கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. கோலியின் உத்திகள், வெற்றிக்காக வெறித்தனமாக உழைப்பது, கடுமையான முயற்சிகள், தாகம் என அதிகமானவற்றை அவரிடமிருந்து இருவரும் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு வீராங்கனையும் நல்ல பார்மில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.
யாரும் சரியா ஆடலை
ஷபாலி வர்மாவைத் தவிர மற்ற யாருமே பெரிய அளவில் ஆஸ்திரேலியாவில் ஜொலிக்கவில்லை. இதுதான் உண்மை. இது எல்லா அணிகளுக்கும் நடக்கக் கூடியதுதான். இந்த விஷயத்திலும் கூட நாம் கோலியைத்தான் பார்க்க வேண்டியுள்ளது. 2 போட்டியில் சொதப்பினால் 3வது போட்டியில் மொத்தமாக சேர்த்து வட்டியும் முதலுமாக பதிலளித்து விடுவார் கோலி. அந்த வேகம்தான் மகளிர் அணியில் அனைவருக்கும் தற்போது வேண்டும் என்றும் அஞ்சும் சோப்ரா மேற்கோள் காட்டியுள்ளார்.
மீண்டும் வலிமை சேர்க்க வேண்டும்
ஸ்மிருதியும் சரி, ஹர்மன்ப்ரீத் கவுரும் சரி தங்களை நிரூபித்து விட்ட வீராங்கனைகள். இருவருமே சிறந்த ஆட்டக்காரர்கள். இருவரும் தற்போதைய பின்னடைவிலிருந்து மீண்டு விரைவில் தேசிய அணிக்கு வலிமை சேர்ப்பார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் அஞ்சும் சோப்ரா. இந்திய மகளிர் அணியில் 100 ஒரு நாள் போட்டிகளில் ஆடிய சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனை அஞ்சும் சோப்ரா என்பது நினைவிருக்கலாம்.