லண்டன் : தற்போது நடந்து முடிந்த கியா சூப்பர் லீகின் தொடரின் சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா வென்றார். அந்த கிரிக்கெட் தொடரில் அதிக ரன் குவித்தவர் என்ற முறையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இங்கிலாந்தில் மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. கியா சூப்பர் லீக் என்ற அந்த தொடரில் ஐபிஎல் தொடர் போலவே, வெளிநாட்டு அணியினரும் பங்கு பெறும் வகையில் அந்த தொடர் நடைபெற்றது. இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்றனர்.
இந்த தொடரில் வெஸ்டெர்ன் ஸ்டார்ம்ஸ் அணிக்காக ஆடிய மந்தனா, துவக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தார். மகளிர் டி20யில் அதிவேக அரைசதம், 61 பந்துகளில் சதம் என தெறிக்கவிட்ட மந்தனாவின் ஸ்ட்ரைக் ரேட்டும் அதிகமாகவே இருந்தது.
இந்த தொடரில் 10 போட்டிகளில், 9 இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த மந்தனா 421 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம், இரண்டு அரைசதம் அடங்கும். மொத்தம் 45 பவுண்டரிகள், 21 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். அதிக ரன் குவித்த அவரது ஸ்ட்ரைக் ரேட் 174.68. பத்து போட்டிகளுக்குப் பின் ஆடவர் கிரிக்கெட்டில் கூட இவ்வளவு ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது கடினம். மந்தனாவின் ஆவரேஜ் 60.14 என்பது மற்றொரு சாதனை.
அவர் ஆடிய வெஸ்டெர்ன் ஸ்டார்ம்ஸ் அணி அரையிறுதியில் தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் மந்தனா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.