2வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 329 ரன்களை குவித்த நிலையில் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 134 ரன்களில் சுருண்டது. முதல் இன்னிங்சில் ஸ்பின்னர் ரவி அஸ்வின் தனது 29வது 5 விக்கெட்டுகள் சாதனையை நிகழ்த்தினார்.
இந்திய பௌலிங்கிற்கு சாதகம்
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் சென்னை மைதானத்தின் பிட்ச், இந்திய பௌலிங்கிற்கு குறிப்பாக ஸ்பின் பௌலிங்கிற்கு சாதகமாக அமைந்திருந்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அஸ்வினும் தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஸ்பீட் பௌலிங்கை எதிர்கொள்வதுதான் கடினமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நிரூபித்த ரோகித் சர்மா
இதனிடையே, இன்றைய 3வது நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் பட்சருடன் விவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், சென்னையின் பிட்சி சிறப்பாக இருந்ததை தன்னுடைய ஆட்டத்தின்மூலம் ரோகித் சர்மா நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய பிட்ச் குறித்த புகார்
சிலர் எதற்கெடுத்தாலும் புகார் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக அதன் எதிரொலியே இந்த பிட்ச் புகார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய பிட்ச்களை மட்டுமே அவர்கள் எப்போதும் குறை கூறி வருவதாகவும் அவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பின்னர்களை எதிர்கொண்ட ரோகித்
சென்னையின் பிட்ச் ஆட முடியாததல்ல என்றும் ஆனால் சவாலான பிட்ச் என்றும் கூறிய கவாஸ்கர், முதல் இன்னிங்சில் மட்டுமின்றி இங்கிலாந்து 134 ரன்களுக்கு சுருண்ட பிறகு இரண்டாவது இன்னிங்சிலும் பிட்ச் சிறப்பாக இருந்ததை இங்கிலாந்து ஸ்பின்னர்களின் பௌலிங்கை எதிர்கொண்டு ரோகித் தனது ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.